பெரிய ஹீரோக்கள் ஆர்யா, விஷால் கூட்டணியில் பாலா இயக்கும் படம் என்பதால் எதிர்பார்ப்புடன் சென்றேன்..அதை படத்தின் பின்பாதி மட்டும்
ஓரளவுக்கு பூர்த்தி செய்தது என்று தான் சொல்ல வேண்டும்....
பொதுவாக கடைநிலை மனிதர்களின் உறவுகளையும் ,உணர்வுகளையும் அழுத்தமாகவும்,அழகாகவும் படம் பிடிக்கும் பாலா அவன்-இவன் படத்தில்
ஏனோ அங்கும் இங்கும் தடுமாறி இருக்கிறார்.. முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் கதை எதை நோக்கி செல்கிறது என்பதை
தெளிவாக உணர்த்துவது சிறந்த திரைக்கதைக்கு அழகு என்று சொல்வார்கள்.. இந்த படத்திலோ முதல் பாதி முடியும் வரை பாலா என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை .....
திருட்டை குல தொழிலாக கொண்டவனின் (ஆனந்த் வைத்யா ) மூத்த
தாரத்து(அம்பிகா) மகன் வால்ட்டர் வணங்காமுடியாக விஷால் ,இரண்டாவது தாரத்தின் ( பிரபா ரமேஷ்) மகன் கும்பிடறேன் சாமியாக ஆர்யா , அதே ஊரில் சொத்துக்களை எல்லாம் பறி கொடுத்து விட்டு தனி மரமாக வாழும் ஜமீன் ஹைனசாக ஜி.எம். குமார்...ஊரில் உள்ள
எல்லோரும் இவரை மதிக்கிறார்கள்..அதிலும் குறிப்பாக விஷால் ,ஆர்யா
குடும்பத்தில் ஒருவன் போல ஹைனெஸ் நெருக்கமாக இருக்கிறார்....
இவர்களைத் தவிர வில்லனாக ஆர்.கே.. விஷால் , ஆர்யாவின் காதலிகளாக ஜனனி ஐயர் மற்றும் மதுஷாலினி நடித்திருக்கிறார்கள்....
ஜமீனின் 60 வது பிறந்த நாள் விழாவில் பெண்கள் போடும் குத்தாட்டத்தோடு படம் தொடங்குகிறது..அதில் பெண்வேடமிட்டு விஷால்
போடும் ஆட்டம் நல்ல அறிமுகம்....விஷாலுக்கு இது முதல் படம்...
ஒரு முழு நடிகனாக அவர் பரிணமித்திருக்கும் முதல் படம்..
பெண்தன்மை கலந்த தோற்றம் ,மாறுகண் பார்வை,இரட்டைக் குரல் என படம் முழுவதும் வியாபித்து இருக்கிறார் விஷால்...சாவி தொலைந்து விட்டதால் ஒரு ஜட்ஜ் வீட்டிற்கு பீரோவை உடைப்பதற்கு அழைத்து வரப்படும் விஷால் அவரிடமே சாவி கேட்பது...ஓட்டைப் பிரித்து திருடப்போன இடத்தில் சின்ன பெண்ணிடம் நகையை புடுங்காமல் செண்டிமெண்ட் பார்ப்பது,..ஜனனி ஐயரை பார்க்கும் போது ஜொள்ளுடன் வழிவது என்று படம்
முழுவதும் சிரிக்க வைக்கும் விஷால் கிளைமாக்ஸ்இல் ஆர்.கே வை பழி தீர்க்கும் போது தான் ஒரு ஆக்ஸன் ஹீரோ தான் என்று நிரூபிக்கிறார்.....
சூர்யா வரும் ஒரு காட்சியில் முக பாவனைகள் மூலம் நவரசத்தையும் காட்டும்
போது விஷால் தானா என்று நம்ப முடியவில்லை...அற்புதம்... (அதே காட்சியில் சூர்யாவின் முகபாவமும் சூப்பர் )
விஷாலுக்கு சமமாக ஆர்யாவை விட ஒரு படி மேலாக எல்லோரையும் கவர்பவர் ஜமீன் ஹைனசாக வரும் ஜி.எம்.குமார்.. ஒட்டு மீசை வைத்துக்கொண்டு குழந்தைத்தனமாக விழுந்து விழுந்து சிரிக்கும்
முதல் காட்சியில் இருந்து முழு நிர்வாணமாக்கப்பட்டு ஆர்.கே வால் சாகடிக்கப்படும் கடைசி காட்சி
வரை மனதில் நிற்கிறார்..
முன்பாதியில் விஷாலை வம்புக்கு இழுக்கும் ஆர்யா பின்பாதியில் விஷால் விஸ்வரூபம் எடுத்தவுடன் அடக்கி வாசிக்கிறார்..போலீஸ்காரர்களுடன் இவர் அடிக்கும் லூட்டி கல..கல..
பிதாமகனில் சூர்யா செய்தது போன்ற பாத்திரம் ஆர்யாவிற்கு இப்படத்தில்
கொடுக்கப்பட்டிருக்கிறது...
சுருட்டு பிடித்துக்கொண்டு சவடால் பேசும் அம்பிகா,குடித்து விட்டு மகனுடனே குத்தாட்டம் போடும் பிரபா ரமேஷ்,
இறைச்சிக்காக மாடுகளைக் கடத்தும் குரூர வில்லனாக ஆர்.கே , நெற்றி முழுவதும் விபூதி பூசிக்கொண்டு குற்றவாளிகளுடன்
கெஞ்சிக்கொண்டும்,கொஞ்சிக்கொண்டும் அலையும் சப் இன்ஸ்பெக்டராக
ராமராஜ் என்று எல்லோருமே கவனிக்க வைக்கிறார்கள்...
ஜனனி , மதுஷாலினி இருவரில் முன்னவர் கண்களாலேயே கவர்கிறார்..
"அம்மா மாவு மாவா போவுதுமா' - 'விடுடா என்ன வந்தவங்களுக்கு தோசையா சுட்டு தரப்போற!.. "உனக்காக என்ன செய்யணும் சொல்லு பீயக்கூட திங்குறேன்" போன்ற எஸ்.ராமகிருஷ்ணனின் வசனங்கள் கடைநிலை
மக்களின் யதார்த்தமான பேச்சு வழக்கை பிரதிபலிக்கின்றன...
இசையும்,ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்றார் போல அமைந்திருக்கின்றன..
குறிப்பாக ஆர்யா,மது சம்பத்தப்பட்ட காட்சிகளில் இசையும் , வானத்தைப்
பின்னணியாக கொண்டு முழு பிரேமில் ஆர்யா வசனம் பேசும் இடத்தில்
ஒளிப்பதிவும் அருமை... எடிட்டிங் தொய்வான திரைக்கதையை ஓரளவு
சரிக்கட்டுகிறது..
இயக்குனர் பாலா பிதாமகனில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளில்
வைத்திருந்த காமெடியை இன்றும் ரசிக்கலாம்..ஆனால் அதையே அவன்-இவன் படம் முழுவதும் செய்ய முயற்சி செய்தது ஏனோ ஒட்டவில்லை ..
விக்ரம்,சூர்யா,ஆர்யா வரிசையில் விஷாலையும் நல்ல நடிகனாக
மாற்றியதற்கு பாலாவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்....
அதே போல் ஜி.எம்.குமார் முழு நிர்வாணமாக ஓடும் காட்சியில் துளி கூட
அருவறுப்பு இல்லை ...அனுதாபமே மிஞ்சியது..அது பாலா டச்..
இந்தப்படம் பார்த்த பிறகு சேதுவை தவிர்த்து பாலா செய்த
படங்கள் எல்லாம் ஒரே பாணியில் இருப்பது புலனாகிறது..
அசாதரணமாகவும் , அழுக்கேறியும் கதாநாயகன் , அவன் திருடனாய்,போக்கிரியாய் எப்படி இருந்தாலும் அவனைக் காதலிக்கும்
வெள்ளைத் தோல் கதாநாயகி , குரூரமான வில்லன் , அவன் யாரையாவது
சாகடிக்க அதற்கு பழி தீர்க்கும் ஹீரோ , பட முடிவில் சாவு நிச்சயம்(சேது உட்பட)... ..
அவன்-இவன் பிதாமகன், நந்தாவின் கலவை என்று கூட சொல்லலாம்...
காட்சியமைப்புகளில் நிறைய வேற்றுமைகள் இருந்தாலும் அடிப்படை
விஷயங்கள் ஒன்று போலவே உள்ளன ..எல்லோரையும் சேர்த்து சந்தோசமான பாடல் வரும்போதே யாரோ சாகப்போவதை நம்மால் ஊகிக்க முடிகிறது... pithamaganil விக்ரம்-சூர்யா-சங்கீதா இவர்கள் கூட்டணியில் இருந்த கெமிஸ்ட்ரி இதில் மிஸ்ஸிங் ...
முதல் பாதி படத்தில் காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்கிறார்கள்..அதிலும் ஆர்யாவுடன் கூடவே வரும் குண்டுப்பையன் சிரித்துக் கொண்டே இருக்கிறான்..நமக்கு தான் ஏனோ சிரிப்பு வரவில்லை..
இடைவேளையில் ஒரு திருப்பமாக ஒரு கோடி மதிப்புடைய சந்தனக்கட்டைகளை விஷால் கடத்துவது போல காட்டுகிறார்கள்..பிறகு
அது என்ன ஆச்சுதுனே தெரியல...
வெயிலுக்குப் பின் அங்காடித்தெரு எடுத்த வசந்த பாலன்,ராம் படத்திற்கு பின் பருத்தி வீரன் எடுத்த அமீர் , பொல்லாதவனுக்கு பிறகு ஆடுகளம் எடுத்த வெற்றி மாறன் இப்படி எத்தனையோ பேர் அடுத்தடுத்த படங்களில்
வேறு வேறு தளங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்..
பாலா அவர்களும் தன் அடுத்த படத்தை சற்று மாறுபட்ட கோணத்தில்
எடுக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு..