30 December 2013

மதயானைக் கூட்டம் - MADHAYANAIKOOTTAM - மிரள வைக்கும் ...


ருடக் கடைசியில் எதிர்பாராமல் வரும் சில படங்கள் நம்மை ஏகாதிபத்தியம் செய்து  விடுவதுண்டு . அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வந்திருக்கும் மதயானைக்கூட்டத்தை சேர்க்கலாம் . அரிவாள் , கத்தியுடன் அவிங்க , இவிங்ய என்று அலையும் மதுரை மாந்தர்களை பற்றிய மற்றுமொரு படம் தான் என்றாலும் அதை மண்  மணம் மாறாமல் யதார்த்தமாக சொன்ன விதத்தில் ஸ்கோர் செய்கிறார் சுகுமாரன் ...

ரெண்டு பொண்டாட்டிக் காரரான  ஜெயக்கொடி தேவரின் ( முருகன் ஜி ) மறைவுக்கு பிறகு குடும்ப  பகை கொளுந்து விட்டு எரிகிறது .  மூத்த மனைவி செவனம்மா ( விஜி ) ,  அவள் மகன் , அவளுடைய சகோதரன் வீரத் தேவர்
( வேல ராமமூர்த்தி ) , இளைய மனைவியின் மகன் பார்த்திபன் ( கதிர் ) இப்படி காதாப்பாத்திரங்களின் உணர்ச்சித்  தீயில் நம்மை குளிர் காய வைக்கிறார் இயக்குனர் ...

முதல் படமே கதிருக்கு இப்படி அமைந்தது அதிர்ஷ்டம் . அதனை  இன்னும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளாமல் போனது துரதிருஷ்டம் . நிறைய இடங்களில் உணர்ச்சிகளை காட்டாமல் உம்மென்றே இருக்கிறார் . அடுத்தடுத்த படங்களில்  தேறி விடுவார் என்று நம்பலாம் . எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அதில் கல் தோன்றா காலத்து காதலியின் அத்தியாவசியத்துக்காக ஓவியா ...



விஜி க்கு இந்த படம் ஒரு மைல்கல் . படம் முழுவதும் ஒரு விதமான வெறித்த பார்வையால் நம்மை மிரள வைப்பவர் க்ளைமேக்ஸ் காட்சியில் கதறி அழுது நம்மை கலங்க வைக்கிறார் . இவருக்கும் இவர் சகோதரராக  நடித்திருக்கும் எழுத்தாளர் வேல ராமமூர்த்திக்கும் இடையேயான சீன்கள் குட்டி கிழக்கு சீமையிலே . படத்தில் வரும்  எல்லோரும் யதார்த்தமாக நடித்திருப்பது பெரிய பலம் . ரகுநந்தனின் பின்னணி இசை ரம்யம் ...

சாவில் தொடங்கி சாவில் முடியும் படம் வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் சின்ன சின்ன சடங்குகளுக்கும் காட்டப்படும் டீட்டைளிங்கில் நம்மை கட்டிப் போடுகிறது . தேவர் மகன் , விருமாண்டி போல தேவர் பின்னணி படம் தான் என்றாலும் அதிலிருந்த ஸ்டார்டம் இதில் இல்லாததால் படத்துடன் இயல்பாக ஒன்ற முடிகிறது . சாவு ஒப்பாரியிலேயே எல்லா கதாபாத்திரங்களையும் விளக்கிய விதம் , அவரவர் கோணத்திலிருந்து பார்க்கும் போது செய்வது சரி தான் என்பது போன்று அமைக்கப்பட்ட பாத்திரப் படைப்பு , யதார்த்தமாக இருந்தாலும் சின்ன சின்ன ட்விஸ்டுடன் நகரும் திரைக்கதை என எல்லாமே மனதில் பதிகின்றன ...

படத்தோடு ஒன்றாத காதல் , யதார்த்த சினிமாவில் திடீரென க்ளைமேக்ஸ் இல் புகுத்தப்படும் ஹீரோயிசம் , " புள்ளக் குட்டிங்கள படிக்க வைங்கடா " என்று கமல் சொல்லி 23 வருடங்களாகியும் இன்னும் பயபுள்ளைங்க திருந்தலையோ என்று லேசாக வரும் சலிப்பு இப்படி குறைகள் இருந்தாலும் படம் பார்த்து சில  நாட்கள் ஆகியும் தன் நினைவுகளால் இந்த மதயானைக் கூட்டம் நம்மை மிரள வைக்கும் ...

ஸ்கோர் கார்ட் : 45

28 December 2013

2014 - மோடி ஆர் நோபடி - MODI OR NOBODY ...


திர்பார்த்ததைப் போலவே 2014 தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்ததும்  , தி.மு.க காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியிருப்பதும் நடந்திருக்கிறது . வாஜ்பாயை பாராட்டிய கையோடு  பி.ஜே.பி கூட்டணிக்கு தாவுவார்  என்று எதிர்பார்த்த நிலையில் அதனுடன் கூட்டு இல்லை என்று கலைஞர் அறிவித்திருப்பது ஆச்சர்யமே . ஆனால் இன்னும் தேர்தலுக்கு குறைந்தது நான்கு மாதங்கள்  உள்ள நிலையில் இது தான் அவருடைய உறுதியான முடிவா என்பதையும் சொல்வதற்கில்லை...

ஏனெனில் முன்பொரு முறை மத சார்புடைய  (!) பி.ஜே.பி யுடன் கூட்டு  இல்லை என்று சொன்ன  கலைஞர்  அதனோடு கூட்டணி வைத்துக் கொண்ட பின் " நான்  இருக்கும் இடத்தில் தான் மதசார்புக்கு இடமில்லையே " என்று மழுப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது . பெரிய கட்சியான தி.மு.க கூட்டணியில் சேர்ந்திருந்தால்  பி.ஜே.பி க்கு அது வலு சேர்க்கும்  என்றாலும் ஊழலுக்கு எதிரான அதன் பிரச்சாரத்திற்கு   பெரிய சறுக்கலை ஏற்படுத்தியிருக்கும்  ...

கடைசியில் ஒரு வழியாக இரண்டு பிரதான கழகங்களும் காங்கிரசை  கை கழுவியிருக்கும் இந்த வேளையில் ம.தி.மு.க ., பா.ம.க போன்ற இதர கட்சிககளை  தன்னுடன் இணைத்துக் கொண்டு பி.ஜே.பி தேர்தலை சந்திப்பது தன்னை மேலும் வலுப்படுத்திக்கொள்ள அதற்கு பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை . பி.ஜே.பி யை தீண்டத்தகாத கட்சி போல வர்ணித்து வந்த காங்கிரசிற்கு இன்று அதே நிலை ஏற்பட்டிருப்பதும்  எதிர்பார்த்ததே...

தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதை விட தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதே தே.மு.தி.க விற்கு வலிமை சேர்க்கும் . 2016 இல் நடக்கவிருக்கும் சட்டசமன்ற தேர்தலுக்கும் தன்  தலைமையில் கூட்டணியை தயார்படுத்திக் கொள்ள விஜயகாந்திக்கு இந்த கூட்டணி அருமையான சந்தர்ப்பம் . காங்கிரஸ் மேல் எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கும் இந்த நிலையில்  பி.ஜே.பி யுடன் சேர்வது அவரது சரிந்த செல்வாக்கை கொஞ்சமேனும் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கலாம் ...

நடந்து முடிந்த ஐந்து சட்டமன்ற தேர்தல்களில் பி.ஜே.பி மூன்றில் ஜெயித்திருப்பதும் , பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக டில்லியில் உருவெடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது . மூன்று மாநிலங்களை கைப்பற்றியதை கணக்கில் கொள்ளாமல் டில்லியில் தோற்றதையே காரணமாக்கி மோடி அலையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல சில மீடியாக்கள் விஷமமாக பிரச்சாரம் செய்து வருவது வேடிக்கையாக இருக்கிறது . டில்லியை பொறுத்த  வரை காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் பி.ஜே.பி க்கு மட்டும் விழாமல் ஆம் ஆத்மி க்கும் சென்றதே பி.ஜ.பி யின் சறுக்கலுக்கு காரணம் . ஆனால் தேசிய அளவில் காங்கிரஷிற்கு வலுவான மாற்றாக பி.ஜே.பி மட்டுமே உள்ளது ...

அதே நேரத்தில் திரிமூணல் , எஸ்.பி , அ.தி.மு.க உள்ளிட்ட வலுவான பிராந்திய கட்சிகள் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள்  பி.ஜே.பி க்கு மட்டும் போகாமல் பார்த்துக் கொள்ளும் . பிஹார் , ஓடிஸா இரண்டிலும் தனக்கிருந்த வலுவான கூட்டணியை பி.ஜே.பி  இழந்திருப்பதும் அதற்கு பெரிய சறுக்கல் . மோடி அலை இதையனைத்தும் சரிக்கட்டுவது கஷ்டமே . இருப்பினும் பி.ஜே.பி வலுவாக உள்ள  குஜராத் , மத்திய பிரதேஷம் , ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களையும் சேர்த்து 200 இடங்களுக்கு மேல் கிடைத்து விட்டால் அது ஆட்சியமைப்பது உறுதி . இதை மனதில் வைத்து அவர்கள் தேர்தல் வியூகம் அமைப்பார்கள் என்று நம்பலாம் ...

தங்களால் ஆட்சி அமைக்க முடியாதது கிட்டத்தட்ட உறுதியானதால் பி.ஜே.பி யை வர விடாமல் தடுப்பதே காங்கிரசின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் . பிராந்திய கட்சிகளின் களப்பில் அமையும் மூன்றாவது  அணிக்கு அது வெளியிலிருந்து ஆதரவு தரலாம் . இந்த கட்சிகளுக்குள் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது இமாலய சிக்கல் . அப்படியே ஒருவரை  ஒருமித்த ஆதரவுடன் தேர்ந்தெடுத்தாலும் அவர் எத்தனை நாட்கள் பிரதமாராக நீடிப்பார் என்பது கேள்விக்குறி . ஏற்கனவே இது போன்ற சிக்கலான சந்தர்ப்பங்களை இந்திய ஜனநாயகம் சந்தித்திருக்கிறது ...

பல விதமான பிரச்சனைகளையும் தாண்டி இன்று மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய பிரச்னை விலைவாசி உயர்வு . அடுத்து பி.ஜே.பி ஆட்சியமைத்தாலே இதனை உடனடியாக சரிக்கட்ட முடியாது , அப்படியிருக்க யார் வழி நடத்தப் போகிற தலைவர் என்பது தெரியாமலேயே பல கட்சிகள் அணி சேர்ந்து ஆட்சியமைத்தால் ஏற்கனவே படு குழியில் இருக்கும் நமது பெருளாதாரம் அதள பாதாளத்திற்குள்  போவது உறுதி ...

இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் குழப்பமில்லாத நிலையான ஆட்சியை மத்தியில் அமர்த்துவதே ஒவ்வொரு குடிமகனின் தலையாய ஜனநாயக கடமை . அதற்கு பி.ஜே.பி , காங்கிரஸ் , அ.தி.மு.க , தி.மு.க என்று கட்சிகளின் தனிப்பட்ட நிறை குறைகளையும் தாண்டி நாட்டை வழிநடத்துவதற்கு ஒரு  நல்ல தலைவன் தேவை . இன்று நம் கண் முன் தெரியும் ஒரே  தலைவன் மோடி . அவர் வந்து மட்டும் பெரிதாக என்ன செய்து விடப்போகிறார் என்று எதிர்மறையாக கேட்காமல் , ஒரு சாதாரண டீ வியாபாரியாக இருந்து இன்று ஒரு மாநிலத்திற்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலைமைச்சராகி அதை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் ஒருவர் ஏன் இந்திய நாட்டிற்க்கு பிரதமாராக வரக் கூடாது என்று ஒவ்வொருவரும் யோசிக்க ஆரம்பித்தால் ஒரு விடிவு பிறக்கும் ...

எது நடந்தாலும் காங்கிரஷிற்கு தான் ஓட்டுப் போடுவேன்  என்பவர்கள் போட்டு விட்டுப் போகட்டும் . ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் மேல் வெறுப்பிலிருப்பவர்கள் தங்கள் ஓட்டுக்களை பி.ஜே.பி க்கு போடுவது மட்டுமே சரியான தீர்வு .  ஏனெனில் டில்லி யில் மக்கள் எடுத்த குழப்பமான முடிவால் அவர்கள் எந்த கட்சியை தூக்கியெறிய நினைத்தார்களோ அதே கட்சியின் ஆதரவுடன் தான் இன்று ஆம் ஆத்மி யே அரசமைக்க முடிகிறது . அதே போல 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் அனைத்தும் பி.ஜே.பி க்கு சென்றடையாத நிலையில் காங்கிரசின் ஆதரவுடன் மீண்டும் பல கட்சிகளின் கூட்டணியாட்சி அமையக் கூடிய பரிதாபமான நிலைக்கு நாளை மீண்டும் நாம் தள்ளப்படலாம் . அப்படி ஒரு நிலைமை வராமல் இருப்பதற்கு ஒரே தீர்வு மோடி ஆர் நோபடி ...


22 December 2013

பிரியாணி - BIRIYAANI - சுவைக்கலாம் ...


ல் இன்ஆல் அழகுராஜா விற்காக ஒன்றரை மாதம் தள்ளி இப்பொழுது ரிலீஸ் ஆகியிருக்கும் வெங்கட் பிரபு வின் பிரியாணி ரசிகர்களுக்கு முழுமையான விருந்தாக அமையாமல் போனாலும் தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றிக்காக காத்திருக்கும் கார்த்தி யின் பசியை  தீர்க்கும் என்று நம்பலாம் ...

சுகன் ( கார்த்தி ) , பரசு ( ப்ரேம்ஜி  ) இருவரும் இணைபிரியா நண்பர்கள் . ஜொல்சுடன் லெக் பீசுக்கு ( மாண்டி தாக்கர் ) ஆசைப்பட்டு இருவரும்  இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் .  பின் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே கதை ( ! ) ... 


கார்த்தி க்கு பிரேம்ஜி பார்க்கும்  பெண்களையும் சேர்த்து உஷார் செய்யும் ப்ளேபாய் கேரக்டர் . ரசித்து நடித்திருக்கிறார் . பழக்க தோஷத்திற்காக இரண்டு சண்டைகள் போட்டாலும் அளவாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார் . படத்திற்கு  பெரிய ப்ளஸ் ப்ரேம்ஜி . ஒவ்வொரு பெண்ணாக தேடிப்பிடித்து கடைசியில் கார்த்திக்கு தாரை வார்க்கும் போது ரசிக்க வைக்கிறார் ...


ஹன்சிகா படத்தில் இருக்கிறார் . நாசர் , ராம்கி , சம்பத் என எல்லோருமே பொருத்தமாக நடித்திருக்கிறார்கள் . முக்கியமான கதாபாத்திரத்திற்கு மாண்டி நல்ல தேர்வு . பொதுவாக வெங்கட் பிரபு வின் படங்களுக்கு நன்றாக இசையமைக்கும் யுவனுக்கு இது 100 வது படம் என்பது கூடுதல் சிறப்பு . " நா நனனா " , " மிஷிஷிப்பி " பாடல்கள் முணுமுணுக்க  வைக்கின்றன ...


வழக்கம் போல கதைக்கு மெனெக்கெடாமல் விறுவிறுப்பான திரைக்கதையை கையிலெடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு . நீளமாக தெரிந்தாலும் சுவாரசியமாக போகும் முதல் பாதி , அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்கும் திரைக்கதை , பாடல்களை படமாக்கிய விதம் எல்லாமே பிரியாணியை மணக்க வைக்கின்றன ...

சரக்கடிப்பது தவிர வாழ்க்கையில் ஒன்றுமே இல்லையென்பது போல ஹேங்ஓவர் கொடுக்கும் ஓவர் டோஸ் சீன்கள் , பெண்களை மட்டப்படுத்தும் வசனங்கள் , நாசர் வேஷத்தில் பிரேம்ஜி போகும் ஜெய்சங்கர் காலத்து பார்முலா , ட்விஸ்ட் இருந்தாலும் நிறைவை தராத க்ளைமேக்ஸ் போன்றவை பிரியாணியின் காரத்தை குறைத்தாலும் பொழுதுபோக்கிற்காக ஒரு முறை சுவைக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41


4 December 2013

விடியும் முன் - VIDIYUM MUN - வெளிச்சம் ...




புற்றீசல் போல வரும் லோ பட்ஜெட் படங்களுள் அத்திப் பூத்தாற்ப் போல ஒன்றிரண்டு மட்டும் கூர்ந்து கவனிக்க வைக்கும் . அப்படி கவனிக்க வைத்த படங்களுள் ஒன்று விடியும் முன் . இப்படியுமா ஒருவன் வக்கிரமாக சிந்திப்பான் என்றும் , இப்படிப்பட்ட இருட்டு சம்பவங்களை வைத்து  படமெடுக்கும் தையிரியம் ஒருவனுக்கு இருக்கிறதே என்றும் இரு வேறு வகையான எண்ண ஓட்டங்களை மனதிற்குள் விதைக்கிறார்  இயக்குனர் பாலாஜி குமார் ...

விலை மாது ரேகா ( பூஜா ) ஒரு 12 வயது சிறுமியுடன்  ( மாளவிகா ) மழை இரவில் தப்பியோடுகிறாள் . பணக்காரன் சின்னையா ( வினோத் ) , ரவுடி துரைசிங்கம் , பிம்ப் சிங்காரம் ( அமரேந்திரன் ) , அவன் நண்பன் லங்கேஷ் ( ஜான் விஜய் ) என நால்வரும் அந்த இருவரையும் துரத்துகிறார்கள் . அது  ஏன் ? எதற்கு ? எப்படி என்பதை விறு விறு திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள் ...

அசிங்கமான பிச்சைக்காரியாக நடித்ததாலோ என்னவோ நான் கடவுளுக்கு பிறகு வாய்ப்பில்லாமல் இருந்த பூஜா விற்கு இந்த படத்தில் பெயர் சொல்லும் வேடம் . குற்ற உணர்ச்சி , விரக்தி இரண்டையும் அவர் கண்கள் இயல்பாகவே வெளிப்படுத்துகின்றன . சின்ன பெண் மாளவிகா கொஞ்சம் கொஞ்சமாய்  மனதை ஆக்ரமிக்கிறாள் . அவளுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்கிற பதைபதைப்பை ஏற்படுத்துவதே திரைக்கதையின் தனிச்சிறப்பு . அவளுக்கும் பூஜாவுக்கும் இடையேயான சீன்கள் குட்டி ஹைக்கூ ...


அமரேந்திரன் , ஜான் விஜய் இருவரும் சில இடங்களில் படத்தின் மேல் நமக்கு ஏற்படும் அயர்ச்சியை  போக்க உதவியிருக்கிறார்கள் . வசனங்கள் அதிகம் இல்லாமல் கண்களால் மட்டும் பேசும் வினோத் நல்ல தேர்வு . சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு , கிரீஸ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பலம் ...

அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது பிடிக்காத கதை , விறுவிறுப்பு இருந்தாலும் ஆங்காங்கே தொய்வுடன் செல்லும் மிஸ்கின் பாணி திரைக்கதை , சலிப்பை தரும் க்ளைமாக்ஸ் , உடல் ரீதியான ஆபாசங்கள் இல்லாவிட்டாலும் அதைவிட அதிகமாக மன ரீதியான கிளர்ச்சியை அல்லது வக்கிரத்தை தூண்டி விடக்கூடிய அபாயமுள்ள சீன்கள் இப்படி விடியும் முன் நிறைய  இருட்டுப் பக்கங்களை கொண்டிருக்கிறது ...

தர்க்க ரீதியான விவாதங்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஒரு சினிமாவாக கிட்டத்தட்ட இரண்டரை  மணி நேரம் திரைக்கதைக்குள் நம்மை ஒன்ற வைத்த தந்திரம் , கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு , படம் முடிந்த பிறகும் அது நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு போன்றவை இருட்டையும் தாண்டி படத்திற்கு வெளிச்சத்தை கொடுக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 45

23 November 2013

இரண்டாம் உலகம் - IRANDAM ULAGAM - இதற்குத்தானா ஆசைப்பட்டாய் செல்வராகவா ?...

 

7G யில் பிரமிக்க வைத்து புதுப்பேட்டை க்கு பின் மனதில் குடியேறியவர் செல்வராகவன் . கிடைத்த  அருமையான வாய்ப்பை ஆயிரத்தில் ஒருவன் போலவே இழுவையான இரண்டாம் பாதியால் இரண்டாம் உலகத்திலும்
நழுவ விட்டிருக்கிறார் ...

நார்மலான நம் உலகம் , ஃபேண்டஸி யான இரண்டாம் உலகம் . இரண்டிலும் ஆர்யா , அனுஷ்கா இருக்கிறார்கள் . இந்த உலகத்தில் காதலியை இழக்கும் ஆர்யா காதலே இல்லாத இரண்டாம் உலகத்திற்கு சென்று அங்கிருக்கும் ஆர்யா - அனுஷ்கா இடையே காதல் பூவை மலர வைக்கிறார்  . காதல் , ஃபேண்டஸி இரண்டையும் குழப்பி கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...


சரியான  உடற்கட்டுடன் ஆர்யா கதைக்கு நல்ல தேர்வு . ஆதி வாசி தோற்றத்தில் ஆஞ்சநேயர் போல இருந்தாலும் சிங்கத்துடனும் , அனுஷ்கா வுடனும் சண்டை போடும் இடங்களில் ரசிக்க வைக்கிறார் . அனுஷ்கா கேரியரில் இந்த படம் ஒரு மைல்கல் . மென்மையான டாக்டர் , வீரமான காட்டுவாசி இரண்டிலும் வித்தியாசம் காட்டி வியாபிக்கிறார் . மற்ற பெண்களுடன் ஆர்யா  பழகுவதை பார்த்து பொறுமுவது , காதல் வந்தவுடன் வெட்கப்படுவது என நிறைய இடங்கள் ஆஸம் . ஆர்யாவின் நண்பராக வருபவர் தமிழ் காமெடிக்கு நல்ல வரவு ...

ராம்ஜி செல்வராகவனின் முதுகெலும்பு என்பதை ஒளிப்பதிவில் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் . வைரமுத்து - ஹாரிஸ் கூட்டணியில் எல்லா பாடல்களும் ஹம்மிங் செய்ய வைக்கின்றன . அனிருத் தின் பின்னணி இசை படத்திற்கு பலம் . ஸ்பெஷல் எஃபெக்டஸ்  , லொக்கேசன் எல்லாமே எல்லாமே படத்திற்கு தேவையான பிரம்மாண்டத்தை தக்க வைக்கின்றன ...


கதையின் தொடக்கத்திலேயே அனுஷ்கா தன் காதலை சொல்வது , ஆர்யா காதலை ஏற்க மறுப்பது , பின் ஆர்யா தொடர அனுஷ்கா மறுப்பது , காதலை ஏற்றுக்கொண்ட பின் வரும் காதல் காட்சிகள் என எல்லாவற்றிலுமே செல்வராகவனின் அக்மார்க் காதலிஸம் கண்களுக்கு விருந்து .  அதே போல படம் நெடுக வரும் ஷார்ட் அண்ட் க்யுட் வசனங்கள் , படத்தின் முதல்பாதி இரண்டுமே இரண்டாம் உலகத்தில் முதல் தரம் ...

இது போன்ற சில சிறப்பம்சங்கள் , கதை தேர்வு போன்றவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால்  இரண்டாம் பாதி , குழப்பமான திரைக்கதை , ஆர்யா - அனுஷ்கா தவிர மனதில் பதியாத இரண்டாம் உலக கதாபாத்திரங்கள் இவையெல்லாம் இரண்டாம் உலகத்தை பாதாள உலகத்திற்கு அனுப்புகின்றன . தனக்கு தெரிந்த காதல் களத்தில் கவர்ந்தாலும் மகதீரா , அவதார் போன்ற படங்களின் பாதிப்பில் " அவலை நினைத்து உரலை இடித்தது " போல இந்த படத்தை எடுத்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது . வழக்கமான மசாலா இல்லாமல் தமிழில் ஃபேண்டஸி வகையறா படம் எடுத்த முயற்சியை பாராட்டலாம் . ஆனால் அதை சரி வர கொடுக்க முடியாமல் போனதால் இதற்குத்தானா ஆசைப்பட்டாய் செல்வராகவா ? என்று ஏக்கத்தோடு சொல்ல வைக்கிறார் இயக்குனர் ...

ஸ்கோர் கார்ட் : 40


16 November 2013

சச்சின் - SACHIN ...


மூன்றே நாட்களில் இந்தியா டெஸ்ட் மேட்சை ஜெயித்ததற்காக முதல் முறையாக ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள் . உலகக்கோப்பை இறுதிப்போட்டி போல மைதானமே நிரம்பி வழிகிறது . 18 ஆட்டங்களிலேயே 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவனையும்  , அறிமுகமான முதல் இரண்டு ஆட்டங்களிலும்  செஞ்சுரி அடித்தவனையும் அனைவரும் மறந்தே போகிறார்கள் . அம்பயர் உட்பட எதிரணியினர் அனைவரும் ஒரு  விளையாட்டு வீரனை வரிசையில்  நின்று வரவேற்கிறார்கள் .  இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருதை ஒருவனுக்கு 40 வயதிலேயே வழங்கி கவுரவிக்கிறது . இவையனைத்தும் நடந்தது 24 வருடங்களுக்கு முன்னால்  நவம்பரில் அறிமுகமாகி இன்று நவம்பர் 16 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து வெளியேறும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்னும் மகத்தான மனிதனுக்காக ...

கால் நூற்றாண்டு காலமாக கிரிக்கெட்டையே மூச்சுக்காற்றாக சுவாசித்து வருபவர் , உலகிலேயே  அதிக அளவு டெஸ்ட் மற்றும் ஒன் டே ஆட்டங்களை  ஆடியவர் மற்றும் ரன்களை குவித்தவர் , சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்தவர் , ஒரு நாள் கிரிக்கெட்  மேட்சில்  முதன் முறையாக 200 ரன்களை அடித்தவர் , அதிக அளவு மேன் ஆப் தி மேட்ச் அவார்ட்களை வாங்கிக் குவித்தவர்  இப்படி எவ்வளவோ சாதனைகளையும் , புள்ளி விவரங்களையும் தாண்டி  " கிரிக்கெட் எங்கள் மதம் சச்சின் அதன் கடவுள் " என்று நாத்திகர்களை கூட சொல்ல வைத்தவர் சச்சின் ...

எளிமை ,  ஒழுக்கம் , கட்டுப்பாடு , அர்ப்பணிப்பு , உதவும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளால் சிறந்த வீரர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதராக ரசிர்களால் மட்டுமல்லாமல் முன்னாள் , இந்நாள் விளையாட்டு வீரர்களாலும் கொண்டாடப்படுபவர் சச்சின் . இவரது ஒரு நாள் போட்டி சாதனைகள் ஒரு வேளை நாளை கோலிக்களாலோ  , டெஸ்ட் மேட்ச் சாதனைகள் புஜாராக்களாலோ முறியடிக்கப்படலாம் . ஆனால் அப்பொழுதும் கிரிக்கெட் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவராக சச்சின் மட்டுமே இருப்பார் ..


15 November 2013

பீட்சா II வில்லா - WOULD HAVE BEEN BETTER ...




பொதுவாக பெரிய வெற்றியடையும் படங்களின் இரண்டாம் பாகங்கள் எதிர்பார்ப்பை அவ்வளவாக  பூர்த்தி செய்வதில்லை . தமிழில்  பில்லா விற்கு பிறகு அதற்கு சமீபத்திய உதாரணம் வில்லா . ஆனாலும்  பெயரை தவிர முதல் பாகத்தோடு வேறு எந்தவித தொடர்புமில்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு திகில் படத்தை கொடுக்க முற்பட்டமைக்காக இயக்குனர் தீபனை பாராட்டலாம் ...

பிசினசில்  எல்லா சொத்துக்களையும் இழந்தாலும் பெரிய எழுத்தாளனாக வேண்டுமென்கிற கனவில் இருக்கும் ஜெபினுக்கு ( அசோக் செல்வன் ) இறந்து போன அப்பாவின் ( நாசர் ) சொத்தான வில்லா கைக்கு வருகிறது . அங்கு காதலி ஆர்த்தி ( சஞ்சிதா ) யுடன் தங்கும் ஜெபினுக்கு என்ன நேர்கிறது என்பதை ஸ்லோவான முதல் பாதி , புத்திசாலித்தனமான க்ளைமேக்ஸ் இரண்டையும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்  ...

அசோக் செல்வனுக்கு எழுத்தாளனுக்கு ஏற்ற கேரக்டர் . தாடி , ஜிப்பா , ரிம்லெஸ்  கண்ணாடி என பொருத்தமாகவே இருக்கிறார் . முகம் மட்டும் எப்பொழுதும் இறுக்கமாகவே இருக்கிறது . ஹீரோவுக்கு சமமான அல்லது ஒரு படி மேலான பாத்திரத்தில் சஞ்சிதா . நல்ல வாய்ப்பிருந்தும் ஏனோ பெரிதாக கவரவில்லை . நாசர் வீணடிக்கப்பட்டிருக்கிறார் ...


முதல் பாகத்துடன் ஒப்பிடும்  பொழுது ஒரு மாற்று குறைவாக  இருந்தாலும் தீபக்  கின் ஒளிப்பதிவும் , சந்தோஷ் நாராயணின் இசையும் படத்திற்கு பலங்கள் . வழக்கமான திகில்  படம் போல இருந்துவிடக் கூடாது என்கிற இயக்குனரின் எண்ணத்திற்கேற்ப இருவரும் அடக்கி வாசித்திருப்பது போல தெரிகிறது ...

பேய் , திகில் படம் என்றவுடன் லிப்ஸ்டிக் , மைதா மாவை அப்பிக்கொண்டு ஓடி வரும் பெண்கள் , அதிர வைக்கும் இசை , அப்நார்மல் கேரக்டர்ஸ் போன்றவற்றை தவிர்த்ததில் இயக்குனர் வித்தியாசம் காட்டுகிறார் . ஸ்லோவாக இருந்தாலும் டீட்டைலிங்கான பின்னணியுடன் கதையை நகர்த்திய விதம் , யோசிக்க வைக்கும் க்ளைமேக்ஸ் போன்றவை வில்லா வில் நல்லாவே இருக்கின்றன ...

வழக்கமான விஷயங்களை தவிர்த்திருந்தாலும் திகில் படங்களுக்கே உரிய அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பை கொடுக்க தவறியிருக்கிறார்கள் . அதிலும் படம் படு ஸ்லோவாக நகர்வதால் ஒன்னேமுக்கால்  மணி நேரம் என்பதே மூன்று மணிநேரம் போல ஒரு அயர்ச்சியை கொடுக்கிறது . அருமையான க்ளைமேக்ஸ் தான் . ஆனால் அதுவும் சட்டென்று அனைவராலும் புரிந்து கொள்ள  முடியாத விதத்தில் இருப்பது வணிக ரீதியாக
படத்திற்கு சறுக்கல் . சென்டரை மட்டும் கருத்தில் வைக்காமல் கதையோடு சேர்த்து  ரசிக்கும் படி விறுவிறுப்பான திரைக்கதையையும் அமைத்திருந்தால் அனைவரும் வில்லா வில் வசித்திருக்கலாம் . பீட்சா II வில்லா - வுட் ஹேவ் பீன் பெட்டெர் ...

ஸ்கோர் கார்ட் : 41







7 November 2013

கலைமகன் கமல் ...


ந்து வயதில் ஆரம்பித்து ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஒரு தலை சிறந்த நடிகனாக , கதை வசனகர்த்தாவாக , பாடகனாக , பாடலாசிரியராக , தயாரிப்பாளராக , இயக்குனராக இப்படி சகலகலாவல்லவனாக ஒருவரால் ஜொலிக்க முடியுமென்றால அவர் கமல்ஹாசன் மட்டுமே ....

வருடம் ஓடினாலும் வயதேராமல் ஒவ்வொரு படத்திலும் புது மாணவன் போல புத்துணர்ச்சியோடு தன்னை புதுப்பித்துக் கொள்ள கமலால் மட்டுமே முடியும் ... சக நடிகர்களெல்லாம் மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்த பணத்தையெல்லாம் சாமர்த்தியமாக மற்ற துறைகளில் முதலீடு செய்து கொண்டிருக்க தன் பணம் , ஜீவன் எல்லாவற்றையும் சினிமாவில் புதைத்துக்கொள்பவர் கமலாக மட்டுமே இருப்பார் ...            

கமல் இல்லாத தமிழ் திரையுலகை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது ... பாடல்களாகவே இருந்த தமிழ் சினிமாவில் நடிப்பின் மூலம் புது இலக்கணம் வகுத்தார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ... ஆனால் 70 களுக்குப் பின்னர் இயக்குனர்களின் நடிகராய் இருந்த இவரை சரியான முறையில் பயன்படுத்தாமல் அநியாயத்திற்கு அழ விட்டு ஓவர் ஆக்டிங் செய்யவைத்தவர்கள் ஏராளம் பேர். அதே சமயம் எம்.ஜி.ஆர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரமது ...


இந்த இரண்டு ஜாம்பவான்களுக்குப் பிறகு அந்த வெற்றிடத்தை சிவகுமார் , ஜெயசங்கர் ரவிச்சந்திரன் என்று யாராலும் நிரப்ப முடியவில்லை . அதை  நிரப்பியவர்கள் கமலும் , ரஜினியும் .கமலின் அறிவுரையால் அவருடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து தனக்கென தனி கமெர்சியல் பாணியை வகுத்துக்கொண்டார் ரஜினி .. ஹிந்தியில் பெரிய வெற்றியடைந்த அமிதாப்பின் படங்கள் ரஜினிக்கு ரீமேக் மூலம் பெரிதும் கைகொடுத்தன . அதன் பிறகு அவரின் வளர்ச்சியை எந்திரன் வரைக்கும் கூட எவராலும் அசைக்க முடியவில்லை ...                   

டான்ஸ் , ஃபைட் என கமெர்சியல் வெற்றிக்குரிய எல்லா தகுதிகளும் தனக்கிருந்தும் அதை மட்டுமே செய்யாமல் உலக சினிமா ஞானம் தந்த உந்துதலில் பரீட்சார்த்த முயற்சிகளில் கமல் இறங்கியதே தமிழ் திரையுலகின் முக்கிய திருப்புமுனை . அதனால் தான் புது இயக்குனர் பாரதிராஜாவிற்க்காக அவரால் கோவணம் கட்ட முடிந்தது , சகலகலாவல்லவனின் வெற்றிக்குப் பின்னாலும் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் " சத்யா " வில் நடிக்க முடிந்தது , இமேஜ் வட்டத்திற்குள் சிக்காமல் மகாநதியில் மூத்திரம் தோய்ந்த கடிதத்தை கைகளால் எடுக்க முடிந்தது ...
        
இதையெல்லாம் கமல் செய்யாமல் விட்டிருந்தால் இன்று வரை நமது ஹீரோக்கள் பண்ணையாருடன் மோதிக்கொண்டும் , ஹீரோயின்களுடன் மரத்தை சுற்றிக்கொண்டும் , தங்கைக்காக சபதம் எடுத்துக்கொண்டும் இருந்திருப்பார்கள் ...
                  
தேசிய விருதுகளையும் தாண்டி தன் ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றியதோடல்லாமல் , ரசிகர்களின் ரசனையை பல படி மேலே எடுத்துக்கொண்டு வந்ததே கமலின் மிகப்பெரிய சாதனை ... கடந்த முப்பது வருடங்களாக நல்ல படம் எடுக்க வேண்டுமென்று நினைக்கும் எவரும் கமலின் பாதிப்பில்லாமல் இருந்திருக்க முடியாதென்பதே கமல் தந்த போதனை ... எவ்வளவு திறமையிருந்தும் எதையாவது சொல்லி கமலின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர்கள் இன்றும்  இருப்பதே தமிழ் சினிமாவின் வேதனை ... 

இவரின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களை நாம் தேர்ந்தெடுத்தால் அதில் கணிசமான இடத்தை கமலின் படங்களே நிரப்பும். நாயகனில் கமலை தவிர வேறு யாரையும் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது . முத்தம் கொடுக்க தான் லாயக்கு என்று கேலி பேசியவர்கள் கூட மூன்றாம்பிறையில் கமலின் நடிப்பை  பார்த்து மூச்சடைத்துப் போயிருப்பார்கள் . தோல்விப் படங்கள் நிறைய கொடுத்திருந்தும் தமிழ் சினிமா வணிகத்தில் கமல் அசைக்க முடியாத தூண் என்பதை எல்லோரும் இந்தியனுக்குப் பிறகு ஒரு முறை உறுதி செய்திருப்பார்கள் ...


வ.உ.சி , கட்டபொம்மன் , கர்ணன் போன்ற சரித்திர நாயகர்களை நினைத்தாலே நடிகர் திலகம் தான் நம் நினைவுக்கு வருவார்... அதே போல கமலை நினைத்தாலே சப்பாணி , சீனு , வேலு நாயக்கர் , அப்பு கிருஷ்ணா இவர்களெல்லாம் நம் கண் முன்னாலே வந்து  நிற்பார்கள். தன் ஸ்டார் அந்தஸ்தை தரை மட்டமாக்கி அண்டர்ப்ளே மூலம் கேரக்டர்களை கேமராவில் மட்டுமல்லாமல் மக்களின் மனதிலும் பதிய வைப்பது கமலுக்கு கை வந்த கலை ...

சிவாஜியைப் போல நடிப்போடு நின்று விடாமல் அதையும் தாண்டி டெக்னிகல் மற்றும் வியாபார யுக்திகளுக்கு கமல் ஒரு ட்ரென்ட் செட்டர் என்பது அவரின் கூடுதல் பலம் ...அபூர்வ சகோதரர்களில் கமல் போட்ட அப்பு வேஷம் இன்று வரை பல டெக்னீஷியன்களால் கூட அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சு ... 

ராஜபார்வைக்கு பிறகு மாற்றுத்திறனாளிகளை முன்னிலைப்படுத்தி இன்று வரை பல படங்கள் , ஆரோக்கியமான தழுவல் இல்லையென்றாலும் தேவர்மகனின் வெற்றிக்கு பிறகு ஜாதியை மையப்படுத்தி பல படங்கள் , குணாவிற்கு பிறகு அந்த வழியில் காதல் கொண்டேன் , காதலில் விழுந்தேன் என்று பல படங்கள் , விருமாண்டி வரிசையில் மேலும் சில படங்கள் என்று உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம் ...         


ஆளவந்தானில் கோல்ட் வின்னர் , விருமாண்டியில் ரிலையன்ஸ் என கார்பரேட்களுடன் கமல் கைகுலுக்கியது வியாபார விருத்தியில் அவருடைய விசாலத்தை காட்டியது . ராஜபார்வை , குணா போன்ற படங்களின் தயாரிப்பாளராக கமல் கையை சுட்டுக்கொண்ட  காயத்திற்கு விக்ரம், சூர்யா போன்றவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் எடுக்கும் புதுப்புது முயற்சிகளே மருந்து ... 
     
முந்தைய படமான மன் மதன் அம்பு  வியாபார ரீதியாக மண்ணைக் கவ்வியிருந்தாலும் அடுத்த படத்தில் விஸ்வரூபம் எடுப்பதென்பது கமலுக்கு மட்டுமே சாத்தியம் .  இன்று ஐம்பத்தெட்டாவது  பிறந்த நாள் காணும் உலக நாயனுக்கு அவருடைய ரசிகனாக மட்டுமல்லாமல் நல்ல சினிமாவின் ரசிகனாக நான் வைக்கும் சமர்ப்பணமே இந்த பதிவு ...

- மீள்பதிவு


6 November 2013

பாண்டிய நாடு - PANDIYA NADU - விசுவ(ஷா)ல் ட்ரீட் ...

  


தீபாவளிக்கு  வந்திருக்கும் மூன்று படங்களுள் சுசீந்திரனின் பாண்டிய நாடு சென்சிபிலாக இருக்கும் என்ற எண்ணம் பொய்க்கவில்லை . கதை பிடித்ததால் விஷாலே படத்தை தயாரிக்க முன் வந்ததும் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருந்தது ...

பயந்தாங்கொள்ளி சிவகுமார் ( விஷால் ) அண்ணனையும் , நண்பனையும் கொன்றவர்களை பழிதீர்க்கும் வழக்கமான மதுரை மண் மணக்கும் படம் தான் பாண்டிய நாடு . ஆனால் அதை நேர்த்தியான திரைக்கதையால் சுவாரசியமாக்குகிறார் இயக்குனர் ...

ஒத்தையாளாக  நின்று ஊரையே அடிக்கும் விஷாலுக்கு இது  நல்ல ப்ரேக் . பயத்தில் திக்குவது , அடியாட்களை பார்த்து பம்முவது , பொய்யாக போன் பேசிக்கொண்டே காதலியை ரூட் விடுவது , குறிப்பாக பஞ்ச் டயலாக் எதுவும் பேசாதது என  இந்த வித்தியாச விஷால் வியக்க வைக்கிறார் . விஷாலை பிடிக்காதவர்களுக்கும் இந்த படத்தில்  அவரை பிடிக்கும் . கீப் இட் அப் ...


லக்ஷ்மி மேனனின் லக் இதிலும் தொடர்கிறது . பார்ப்பதற்கு  பக்கத்து வீட்டுப் பெண் போல இருந்தாலும் கண்களும் , உடல்வாகும் வசீகரிக்கின்றன . விஷாலின் நண்பனாக சில சீன்களே  வந்தாலும் விக்ராந்த் நல்ல தேர்வு . சூரி கொஞ்சம் சிரிக்க வைக்கிறார் ...

விஷாலை போல நடிப்பில் படத்தை தூக்கி நிறுத்தும் மற்ற தூண்கள் அப்பா பாரதிராஜா வும் , வில்லன் சரத் லோஹிதஸ்வா வும் . மகனை  கொன்றவனை பழி தீர்க்க துடிக்கும் அப்பாவாக  வரும் பாரதிராஜா நடிப்பிற்காக  பேசப்படுவார் . இயக்குனர்கள் தொடர்ந்து இவருக்கு அப்பா வேடமாக கொடுத்து முடக்காமல் இருத்தல் நலம் . கட்டுமஸ்தான் உடல்வாகு இல்லாவிட்டாலும் கண்களாலேயே மிரட்டுகிறார் வில்லன் சரத் ...

இமானின் இசையில் " ஒத்தக்கடை " , " பை பை " பாடல்கள் தாளம் போட வைத்தாலும் பை பை பாடல் ஸ்பீட் பிரேக்கர் . அனல் அரசுவின் சண்டைக் காட்சிகள் யதார்த்தம் ...



இழவு சீனில் இருந்து படத்தை தொடங்குவது , வில்லன் , ஹீரோ கேரக்டர்களை மனதில்  பதிய வைத்தது , " தடையற தாக்க " பாணியில் ஹீரோ முகத்தை மூடிக்கொண்டு அடியாட்களை அடித்தாலும் அதை விறுவிறுப்பாக படமாக்கியது , ஹீரோ வில்லனை பழிவாங்குவது நூற்றாண்டு கால சினிமா என்றாலும் அதை டீட்டைளிங்கோடு கொடுத்தது என பாண்டிய நாட்டில் பிடிக்கும் விஷயங்கள் நிறைய ...

வலுவான அண்ணன் கதாபாத்திரத்துக்கு வலுவில்லாத ஆளை தேர்வு செய்தது , முகத்தை மூடிக்கொண்டு அடித்தாலும் சொந்த வண்டியின் நம்பர் பிளேட்டை மூடாமல் போகும் லாஜிக் சொதப்பல் , ஊரை விட்டு ஓடிப்போன விக்ராந்திற்கு என்ன  ஆனது என்பதை சொல்லும் சினிமாத்தனமான ப்ளாஷ்பேக் போன்றவை பாண்டிய நாட்டிற்கு நேர்ந்த சோதனைகள் ...

மதுரையையே கைக்குள் வைத்திருக்கும் தாதா , அண்ணனை கொன்றதற்காக  அவனை பழி வாங்க பொங்கியெழும் பயந்தாங்கொள்ளி ஹீரோ , தாதாவிற்கு உதவியாக மினிஸ்டர் , சென்டிமென்ட் அப்பா இப்படி நிறைய வழக்கமான வழக்கங்கள் படத்தில் இருந்தாலும் சுசீந்திரனின் நேர்த்தியான திரைக்கதை . மதியின் நுட்பமான ஒளிப்பதிவு , விஷாலின் நடிப்பு இவையெல்லாம் சரியான விகிதத்தில் சேர்ந்ததால் பார்ப்பவர்களுக்கு பாண்டிய நாடு விசுவ(ஷா)ல் ட்ரீட் ...

ஸ்கோர் கார்ட் : 43



4 November 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா - ALL IN ALL - அமெச்சூர் ...




முதல் மூன்று படங்களையுமே வெற்றி பெற செய்த ராஜேஸ், சில வெற்றிகளுக்கு பிறகு தொடர்  தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும் கார்த்திக்குடன் நண்பன் சந்தானத்தை நம்பி கை கோர்த்திருக்கும் படம் ஆல் இன் ஆல் . ஆனால் அனைவருக்கும் அது ஆல் இஸ் வெல் ஆக அமையாமல் போனது துரதிருஷ்டமே ...

லோக்கல் சேனல் AAA டி.வி யை தன் அசிஸ்டன்ட்  கல்யாணத்தின்
( சந்தானம் ) உதவியுடன் NO.1 ஆக்க முயற்சிக்கிறார் எம்.டி அழகுராஜா
( கார்த்தி ) .  ஒரு கல்யாண ரிசப்சனில் அழகான தேவிப்ரியாவை ( காஜல் ) பார்த்தவுடன் தனது கொள்கையை கிடப்பில் போட்டு விட்டு  அவளை காதலித்து திருமணம் செய்வதையே புது கொள்கையாக கையிலெடுக்கிறார் .
அதில் ஜெயித்தாரா என்பதை கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் கொஞ்சம் சிரிப்புடனும் , நிறைய மொக்கைகளுடனும்  சொல்லி நம்மை வதக்கி எடுக்கிறார் இயக்குனர் ...
 
பொதுவாகவே ராஜேஸ் படங்களில் வரும் கேசுவல் ஹீரோ வேடம் கார்த்திக்கு எளிதாக பொருந்துகிறது . ஆனால்  ராஜேஷின் மற்ற ஹீரோக்களை போலில்லாமல் இவர் சந்தானத்தை விட அதிகமாக பேசி நம்மை அதிகம் சோர்வாக்குகிறார் . சண்டை எதுவும் போடாதது ஆறுதல் ...



ஹீரோக்களை  அடா புடா என்று  அளவளாவும் சந்தானம் இதில் கார்த்திக்கை வாங்க சார் , போங்க சார் என்று அழைப்பது அவருக்கு  மட்டுமல்ல நமக்கே புதுசாக தான் இருக்கிறது . ஆனால் ப்ளாஷ் பேக் கில்  கார்த்திக்கை வாடா தம்பி என்று கூப்பிட்டு சமன் செய்கிறார் . வழக்கம் போல இப்படத்திலும் அவர் ஆபத்பாந்தவனாக இருந்தாலும் முந்தைய ராஜேஸ் படங்களின் மேஜிக் இதில் டோட்டலி மிஸ்ஸிங் ...

காஜல் கேரக்டர் சுத்த பேத்தலாக இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . ஒரு மாதத்தில் ஷோபனா ஆகி விடுவேன் என்று சவால் விட்டு அதற்காக எம்.எஸ். பாஸ்கரிடம் பரதம் கற்றுக்கொள்வது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் ரசிக்க முடிகிறது ...



பிரபு , கோட்டா ஸ்ரீனிவாச ராவ் , நரேன் , சரண்யா  போன்ற நட்சத்திர பட்டாளத்தில் கோட்டா தனித்து நிற்கிறார் . தமன் இசையில் " உன்னை பார்த்த" பாடல்  மட்டும் ஹம்மிங் செய்ய வைக்கிறது . ( தேங்க்ஸ் டூ இசைஞானி ) ...

வெட்டியாக அல்லது வெட்டியான லட்சியத்துடன் சுற்றும் ஹீரோ , அவன் எது செய்தாலும் ஆதரிக்கும் அம்மா , அவன் உதவிக்கு சந்தானம் , பார்த்தவுடன் காதல் வயப்பட வைக்கும் ஹீரோயின் என்று ராஜேஸ் தனக்கு ஏற்ற படியான டெம்ப்ளேட் கேரக்டர்களுடன் ஆல் இன் ஆலிலும்  களமிறங்கியதில் தப்பில்லை . ஆனால் வீக்கான  கதைக்கும்  தனி ட்ராக் எதுவுமில்லாமல் சந்தானத்தின் கவுண்ட்களை வைத்து சுவாரசியமாக அவர் பின்னும் திரைக்கதை இதில் சரிவர அமையாமல் ஒரு லெவெலுக்கு மேல் ஆள விடுங்க ராஜா என்று சொல்லுமளவுக்கு போனது தான்  பரிதாபம் ...

கார்த்தி நடிப்பதால் சண்டை , வழக்கமாக ராஜேஸ் படங்களில் வரும் ஹீரோ - ஹீரோயின் ஈகோ மோதல் , ஒயின் ஷாப் சீன்கள் ( ஒரு சீனை தவிர ) போன்றவற்றை தவிர்த்தது அறுதல் . படத்தின் நீளம் , பொறுமையை சோதிக்கும் ப்ளாஷ்பேக் , காஜல் சம்பந்தப்பட்ட மொக்கை சீன்கள் இவையெல்லாம் சந்தானம் ஸ்க்ரீனில் வந்தாலே சிரிக்கும் அதிதீவிர ரசிக கண்மணிகளுக்கு பிடிக்க வாய்ப்பு இருந்தும் ஆல் இன் ஆல் அழகுராஜா வை அமெச்சூர் என்றே சொல்ல வைக்கின்றன ...

 ஸ்கோர் கார்ட் : 39








2 November 2013

ஆரம்பம் - ARAMBAM - அவசரம் ...


ஜித் - விஷ்ணுவர்தன் - யுவன் காம்பினேஷனின் ஸ்டைலிஷான மேக்கிங் , அஜித் தின் ஒப்பனிங்  இரண்டையும் மட்டும் அதிகமாக நம்பி வந்திருக்கிறது ஆரம்பம் . தீபாவளிக்கு வந்திருக்கும் படம் ரசிகர்களுக்கு உண்மையிலேயே  தல தீபாவளியா ? !  பார்க்கலாம் ...

நண்பனின் சாவுக்கு காரணமானவர்களின் கதையை முடிப்பதே ஆரம்பம் . இதை அஜித் படத்தில் பேசுவது போல " Make IT Simple " ஆக சொல்லாமல் இடைவேளை வரை சஸ்பென்ஸ் வைத்து பின் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...

சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல் , கூலிங் க்ளாஸ் , ஸ்டைலான லுக்
( கோட் இல்லாமலா ? )  , கையில் கன் என அஜித்திற்கு அல்டிமேட் ரோல் . வசனமே தேவையில்லை அவர் வந்தாலே தியேட்டர் அதிர்கிறது .  போலீஸ் தோள்  மேலே  கை வைத்தவுடன் அஜித் முறைத்து விட்டு கூலிங் க்ளாஸ்  போடும் இடம் க்ளாஷான மாஸ் . அஜித் ரிஸ்க் எடுத்து சண்டை செய்திருந்தும் உடல் சுற்றளவு பிரபுவை நியாகப்படுத்துகிறது . அதிலும் ராணா , அதுல் , ஆர்யா ,  கிஷோர் என  வருபவர்கள் எல்லாம் ஸ்லிம் அன்ட் பிட்டாக இருக்க என்ன தல இது ? ...


ஆர்யா விற்கு தனி லவ் ட்ராக் , நிறைய சீன்கள் எல்லாம் இருந்தும் தல இருப்பதால் தனித்துவம் இல்லாமல் இருக்கிறார் . அஜித் ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என்கிற குழப்பத்தில் இவர் செய்யும் சேட்டைகள் சூப்பர் . ப்ளாஷ்பேக் லவ் காட்சிகளில் அங்கிள் பன் போல வந்து அட போட வைக்கிறார் . லாஜிக் இடித்தாலும் ஆர்யாவின் ஹாக்கிங் மேட்டர் ரசிக்க வைக்கிறது ...

நயன் , டாப்சீ இருவரில் முன்னவர் தாரளாமாக நடித்து தாகம் வர  வைக்கிறார்.  பப்ளி ரோலில் டாப்சீ , மெச்சூர்ட் ரோலில் நயன் இருவருமே கவர்கிறார்கள் . அஜித்தின் நண்பனாக ரானா , போலீஸ் ஆபீசர்களாக அதுல் குல்கர்னி , கிஷோர் , கடைசியில் சாகப்போகும் போது  கூட டே ஆபீசர் என்று விளிக்கும் வில்லன் என பொருத்தமான நட்சத்திரங்கள் ...

 "  அடடடா " , " என் பியூஸ் "  பாடல்கள் யுவன் அக்மார்க் . அஜித்  வரும் போது
ஒலிக்கும் பி.ஜி பெர்பெக்ட் . ஆனாலும் யுவன் - விஷ்ணு கூட்டணியின் பழைய மேஜிக் மிஸ்ஸிங் . ஒளிப்பதிவு , படத்தொகுப்பு , ஆக்ஸன் எல்லாமே படத்திற்கு பலம் ...


இடைவேளை வரை சஸ்பென்சுடன் நகரும் திரைக்கதை , ஆய் , ஊய் வசனங்கள் இல்லாமல் அஜித்தின் மாஸை க்ளாஸாக காட்டும் சீன்கள் , ஆர்யா , நயன் என நட்சத்திர பட்டாளங்கள் , ஹாக்கிங்கை ( ஹாலிவுட்டில் இருந்து சுட்டிருந்தாலும் ) பயன்படுத்திய விதம் , சில நேரமே வந்தாலும் அஜித் - ரானா சம்பந்தப்பட்ட காட்சிகள் என எல்லாமே அஜித் மூலம் படத்திற்கு கிடைத்த ஆரம்பத்தை தக்க வைக்கின்றன ...

அஜித்தை ஸ்டைலாக நடக்க விடுவது , கூலிங் க்ளாஸ் போட வைப்பது , பைக் ஓட்ட விடுவது இதெற்கெல்லாம் ஆரம்பத்துடனாவது முடிவு கிடைக்குமா ? கொஞ்சம் போரடிக்குது பாஸ் . தீபாவளி ரிலீஸ் என்பதாலோ என்னவோ படம் நெடுக சுடுகிறார்கள் . ஆனால் நமக்கோ  ஜேம்ஸ் பாண்ட்  வகையறா படங்களை விட ஜாக்கிசான் படங்கள் தான் பிடிக்கிறது . ராணுவ வீர்களின் தற்காப்பு சாதனங்களில் கூட நடக்கும் ஊழலை வைத்து பின்னப்பட்ட அழகான கதை , வழக்கமான அரசியல் வாதி , ஊழலுக்கு  உடந்தையான மேலதிகாரி , அதை கண்டுபிடிக்கும் நல்ல போலீஸ் போன்றவற்றால் பின்னுக்கு தள்ளப்படுகிறது . பில்லா  , மங்காத்தா போல ஆரம்பம் அஜித்திற்கு அல்டிமேட் படமாகும் வாய்ப்பிருந்தும் அதை ஏதோ அவசரத்தில் நழுவ விட்டிருக்கிறார்கள் ...

ஸ்கோர் கார்ட் : 42


27 October 2013

2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் ? ! ...


டுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில் யார்  யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள்  என்கிற சஸ்பென்ஸ் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே  இருந்தாலும் அதற்கான அரசியல் சூடு தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது . 2014 தேர்தலுக்கு  இன்னும் தயாராகாமல் தமிழகம் தடுமாறுகிறதா ?! ...

மோடி மேஜிக் நாடெங்கும் வியாபித்திருந்தாலும் தமிழகத்தில் மோடி வித்தையெல்லாம் பலிக்காது என்றவர்களை கூட அவர் தலைமையில் நடந்த திருச்சி மாநாடு திரும்பிப்  பார்க்க வைத்திருக்கும் . எந்த ஒரு கட்சி ஆட்சியை பிடிப்பதற்கும் பண , அரசியல் பலங்களையும் தாண்டி தன்னலமற்ற தொண்டர்களின் பங்களிப்பும் , புத்துணர்ச்சியும் மிக மிக அவசியம் . அதனை மோடி பிரதம வேட்பாளாராக அறிவிக்கப்பட்ட பிறகு  பி.ஜே.பி யினரிடம்  கண் கூடாக காண முடிகிறது ...

தமிழகத்திலும் அதே புத்துணர்ச்சி எதிரொலித்தாலும் அவர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி  மோடியின் சென்னை வருகைக்கு பிறகும் உறுதி செய்யப்படாமல் போனது துரதிருஷ்டமே . இருப்பினும் அனைத்து கட்சிகளுக்குமிடையே  எந்த ஒரு உறுதியான பேச்சு வார்த்தையும் தொடங்கப்படாத நிலையில் எது  வேண்டுமானாலும் நடக்கலாம் . அரசியலில்  நிரந்தர நண்பனும் இல்லை , எதிரியும் இல்லை என்பார்கள்  . தனிப்பட்ட முறையில் நட்பு பாராட்டுபவர்கள்  கூட அரசியல் அரங்கில் எதிர் எதிர் அணியில் மோதுவதும் , எதிர் அணியில் இருப்பவர்கள் தேர்தலை ஒட்டி கை கோர்ப்பதும் புதிதல்ல ...

இந்த சூழ்நிலையில் நிதியமைச்சருடன் ஒரே மேடையில் அ.தி.மு.க   மந்திரி அமர்ந்ததையும்  , பிரதமருக்கு தமிழக முதல்வர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததையும் எதேச்சையாக  நடந்தது  என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது . இதையெல்லாம் பார்க்கும் போது கடைசி நிமிடத்தில் அ.தி.மு.க   கூட்டணி அமையாமல் போனாலும் அதற்காக பி.ஜே.பி  சோர்ந்து விட வேண்டிய அவசியமிருக்காது  . கடந்த  சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.5 சதவிகித வாக்குகளை பெற்றதோடு கணிசமனான  இடங்களில் மூன்றாவது இடத்திற்கு வந்ததும் , உள்ளாட்சி தேர்தலில் 13 நகராட்சிகளை  கைப்பற்றியதும் கட்சி இங்கே வளர்ந்து வருகிறது என்பதை நன்றாகவே காட்டுகிறது . தமிழகத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டும் பலம் வாய்ந்ததாக அறியப்பட்ட கட்சி மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு 15 தொகுதிகளுக்கு மேல் பலம்  பெற்றிருப்பதும்  குறிப்பிடத்தக்கது . பி.ஜே.பி யுடன் கூட்டணி வைக்காமல் போவது இரு பக்கமும் இழப்பு என்பதே நிதர்சனம் ...

அதே வேளை மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு  அதிக வாய்ப்புள்ள கட்சி என்பதால் இங்கே வலுவான கூட்டணி அமைவது பி.ஜே.பி க்கு மிகவும் அவசியமாகிறது .  2004 இல் எந்தவொரு காரணமுமில்லாமல் பி.ஜே.பி யை கழட்டி விட்டு விட்டு காங்கிரசுடன் கை கோர்த்த தி.மு.க விற்கு இந்த முறை அதையே மாற்றி செய்வதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன . தி.மு.க வை கூட்டணியில் சேர்ப்பது மூலம் நடுநிலையாளர்களின் ஓட்டுக்கள் சிதைவதற்கு வாய்ப்பிருந்தாலும் கிட்டத்தட்ட  அ.தி.மு.க விற்கு சமமாக வாக்கு வங்கியை வைத்திருக்கும் தி.மு.க வை பி.ஜே.பி யால் கழித்து  விட முடியாது . பத்து வருடங்களுக்கு முன்னாள் அ .தி.மு.க  ஆட்சியிலிருக்கும் போதே தி.மு.க தமிழகத்தில் நாற்பதையும் வென்றதை  மறுக்கவோ , மறைக்கவோ முடியாது . இங்கே  மாறி மாறி கழகங்களின் ஆட்சி தான்  நடந்து கொண்டிருக்கின்றன ...

இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக  இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட  தே.மு.தி.க இப்போது திணறிக் கொண்டிருக்கும் வேளையில் தன்னை நிலைநிறுத்த பி.ஜே.பி யுடனான கூட்டணி ஓர் வாய்ப்பாக அமையலாம் . இந்த முறையும் கடவுளுடனோ அல்லது  மக்களுடனோ மட்டும் கூட்டணி வைக்கும் நிலையில் விஜயகாந்த்  இல்லை . கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் பெற்றும் ஒரு  தொகுதியை கூட வெல்ல முடியாமல் போனதை அவர்  மறந்திருக்க மாட்டார் . தற்போதைய சூழ்நிலையில்  அவருக்கு சரியான புகலிடம் பி. ஜே .பி  மட்டுமே  . கடந்த சட்டசபை தேர்தலில் அ .தி.மு.க கூட்டணிக்குள் அவர் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டதால் தி.மு .க விற்கு எதிரான அலை தே.மு.தி.க விற்கு கட்சி ஆரம்பித்து 8 வருடங்களுக்குள்ளாகவே பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கொடுத்தது . இந்த முறையும் காங்கிரஸிற்கு எதிரான அலையை அவர் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டால் சரிவிலிருந்து மீளலாம் ...

இந்த கூட்டணிக்குள் ம.தி.மு.க வும் இணைவது கூடுதல் பலம் சேர்க்கும் . கட்சி ரீதியாக ம.தி.மு.க பெரிய அளவில் வளர்ந்திருக்கா விட்டாலும் அதன்  தலைவர் வை.கோ விற்கு மக்களிடம் இன்னும் நல்ல பெயர் இருக்கிறது . இந்த கூட்டணியில் தொகுதிகளுக்காக அவர் தன்மானத்தை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும் நம்பலாம் . பா .ம.க தலைவர் ராமதாஸ் திருமாவளவனை தவிர்த்து  ஜாதி கட்சிகளை இணைக்கும்  முயற்சியை  கை விட்டு விட்டு இந்த கூட்டணிக்குள் வருவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும் . இது போன்ற ஒரு வலுவான மூன்றாவது கூட்டணி அமைவதில் சிக்கல் இருந்தாலும்  , அப்படி அமையும் கூட்டணி  தேசிய அளவில் மட்டும் இல்லாமல் அடுத்த  சட்டசபை தேர்தலில் இரண்டு பிரதான கழகங்களுக்கு மாற்றாகவும் தமிழகத்தில் அமையக் கூடும் . தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பதில்  உள்ளது போன்ற இடியாப்ப சிக்கல் நிச்சயம்  இதில் இருக்காது எனவும் எதிர்பார்க்கலாம் ...

இப்படி அரசியல் கட்சிகள் எப்படி வேண்டுமானாலும் கூட்டு சேரலாம் . கடந்த வருகையின் போது மோடி தொண்டர்களிடையே  சொன்னது போல வரும் தேர்தல் அவர்களுக்கு பரிசோதனை முயற்சி அல்ல , நிச்சயம் மத்தியில்  மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய  அருமையான வாய்ப்பு . இதை அவர்கள் நழுவ விட மாட்டார்கள் . ஏனெனில் காங்கிரஸ்  மேல் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்  . மூன்றாவது அணிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி . அதே சமயம் சிறந்த பிரதமராவதற்குரிய தகுதி மோடிக்கு இருப்பதும் , பத்து  கோடிக்கும் மேல் இளைஞர்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடன் இருப்பதும் பி.ஜே.பி க்கு மேலும் பலம் சேர்க்கும் விஷயங்கள் ...

ஆனால்  நிலையான ஆட்சி அமைவதற்கும்  272 தொகுதிகள் பி.ஜே.பி கூட்டணிக்கு தேவை . தமிழகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இல்லாத போதும் நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதை உணர்ந்து  கடந்த சட்டமன்ற தேர்தலில் தங்களின் நியாயமான கோபத்தை வாக்களிப்பில் காட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் இந்த முறையும் அதே போல நாடாளுமன்ற தேர்தலில் செய்வார்களா ? அல்லது கூட்டணியையும் , சொந்த விருப்பு , வெறுப்புகளையும் பார்த்து தடுமாறுவர்களா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ...



12 October 2013

நய்யாண்டி - NAYYAANDI - நாடகம் ...


னது இரண்டாவது படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனரும் , நடிப்பிற்க்காக தேசிய விருது பெற்ற நடிகரும் ஒன்று சேர்ந்தால்
எதிர்பார்ப்புக்கு பஞ்சமா இருக்கும் ? ஆனால் எதிர்பார்த்த ரசிகர்களை இருவருமாக சேர்ந்து நய்யாண்டி செய்து விட்டார்கள்
என்று தான் சொல்லத் தோன்றுகிறது ...

40 வயதை நெருங்கியும் திருமணமாகாத இரண்டு முதிர்கன்னர்களின் கடைக்குட்டி தம்பி சின்ன வண்டு ( தனுஷ் ) . மாமா பையனின்
( சூரி ) ஊர்த்திருவிழாவில் சின்ன வண்டு வன ரோஜாவை ( நஸ்ரியா ) சந்திக்க , வேலை வெட்டி இல்லாத ஹீரோக்களுக்கு என்ன பிறக்குமோ அது பிறக்கிறது . ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவர்களது காதல் கல்யாணத்தில் முடிய ஹீரோ தனது குடும்பத்தாரை எப்படி சமாளிக்கிறார் என்பதை நம்மை சிரிக்க வைக்கும் முயற்சியோடு சொல்லியிருக்கிறார் இயக்குனர் சற்குணம் ...

தேசிய விருதுக்கு  பிறகு தொடர்ந்து சீரியசான படங்களிலேயே நடித்துக் கொண்டிருக்கும் தனுஷ் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய நினைத்து விட்டார் போலும் . அவர் எண்ணப்படி ஜாலியான கேரக்டர் . கேசுவலாக செய்திருக்கிறார் . ஆனால் கதையை கொஞ்சம் சீரியசாகவே கேட்டிருக்கலாம் பாஸ் . சிறந்த நடிகர் கிடைத்துவிட்டார் என்று நாம் நெஞ்சை நிமிர்த்தும் வேளையில் சிவாவுக்கும் , சிவ கார்த்திகேயனுக்கும் போட்டியாக இதெல்லாம்  தேவையா என்று கேட்கத் தோன்றுகிறது ...

தனது நடிப்புத் திறமையை சினிமாவை  தாண்டியும் சமீபத்தில் நிரூபித்திருக்கும் நஸ்ரியா விற்கு இதில் படித்த  பல் டாக்டராக இருந்தாலும் பல்லிளிக்கும் தமிழ் சினிமாவின் வழக்கமான லூசுப்பெண் பாத்திரம் . ஜெனிலியா போல  ஓவர் ஆக்ட் செய்து வெறுப்பெற்றாமல் அளவாக நடித்திருப்பதை பாராட்டலாம் ...

சந்தானம் இல்லாத  குறையை சூரியை வைத்து ஓரளவு சமாளித்திருக்கிறார்கள் . மற்ற நண்பர்களில் இமான் அண்ணாச்சி கவனிக்க வைக்கிறார் . அண்ணன்கள் ஸ்ரீமன் , சத்யன் இருவரில் தொப்பையை இறுக்கி சிவாஜி போன்ற முகபாவத்தில் ஸ்ரீமன் மட்டுமே சிரிக்க வைக்கிறார் . ஜிப்ரான் இசையில் இனிக்க இனிக்க , டெடி பீர் பாடல்கள் நன்றாக இருக்கின்றன . பின்னணி இசையில் எஸ்.ஏ.ராஜ்குமார் இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார் . காமெடி படமாக இருந்தாலும் குத்துவிளக்குகளுக்கு நடுவில் புகுந்து தனுஷ் , நஸ்ரியாவை காட்டும் ஷாட்டில் வேல்ராஜ் ஒளிர்கிறார் ...

கரண்ட் ட்ரெண்டிற்கு ஏற்றபடியான கதை , இரண்டு அண்ணன்களின் ஜொள்கலுக்கிடையே வழிந்தோடும்  இரண்டாம் பாதி , தனுஷ் - நஸ்ரியா ஜோடி , ஒளிப்பதிவு போன்றவை நய்யாண்டி யில் தர்பார் செய்கின்றன . இரண்டு சீரியஸான  ஆட்கள் சேர்ந்து ஜாலியான படம் பண்ண நினைத்ததில் தப்பில்லை . ஆனால் அதை சீரியசாக பண்ண வேண்டாமோ ? . நஸ்ரியாவை கவர தனுஷ் ஐடியா வாக என்னென்னமோ பண்ணி காமெடி என்ற பெயரில் கடிக்க அவரோ சப்பென்ற காரணத்திற்காக காதலில் விழுந்து " இதுக்கு ஏம்பா இத்தன நேரம் இழுத்தீங்க " என்று சொல்ல வைக்கிறார் ...

செண்டிமெண்டிற்காக  அப்பா நரேன் , தனுஷிற்காக இரண்டு சண்டை , க்ளைமாக்சில்  வந்து மிதி வாங்கும் வில்லன் , எதிர்பார்த்த படி வரும் அடுத்தடுத்த காட்சிகள் இப்படி நத்திங் நியூ இன் நய்யாண்டி . சற்குணத்தின் முதல் படம் களவானியில் இருந்த ப்ரெஷ்னெஸ் இதில் இல்லாமல் போனது கூட பரவாயில்லை , ஆனால் மொத்த படமும் ஏதோ நாடகம் பார்த்தது போன்ற உணர்வைக் கொடுத்தை தவிர்த்திருக்கலாம் ...

ஸ்கோர் :கார்ட் : 39



5 October 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - ONAK - மனதை வேட்டையாடும் ...



சில படங்களை கண்டிப்பாக பார்க்க வேண்டுமென்று தோன்றினாலும் ஏதோ சில காரணங்களால் பார்க்க முடியாமல் போகும் . அந்த லிஸ்டில் சமீபத்திய படம் மூடர் கூடம் . அதே லிஸ்டில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே தாமதமானாலும் பார்த்து விட்டேன் ...

துப்பாகியால் சுடப்பட்டு ரோட்டில் சாகக்கிடக்கும் ஒருவனை மருத்துவக் கல்லூரி மாணவன் சந்துரு ( ஸ்ரீ ) தன் சொந்த முயற்சியால் காப்பாற்றுகிறான் . காபாற்றப்பட்டவன் போலீசால் தேடப்படும் கிரிமினல் ஊல்ப் ( மிஸ்கின் ) என்று தெரிய வர சந்துருவுக்கு என்ன நேர்ந்தது ? ஊல்பின் பின்னணி என்ன ? என்பதே இரண்டரை மணி நேர படம் . ஹீரோ , ஹீரோயின் , காமெடி , காதல் என்று தமிழ் சினிமாவின் வழக்கங்கள் எதுவுமில்லாமலேயே இந்த இரண்டரை மணி நேரத்தில் ( மொட்டைத்தலை அடியாள் , வெறித்துப் பார்க்கும் கேரக்டர்கள் , ஸ்டாண்ட்ஸ்டில் ஷாட்ஸ் போன்ற மிஸ்கினத்தனங்கள் இருந்தாலும் ) தன் விறு விறு திரைக்கதையால் லயிக்க வைக்கிறார் மிஸ்கின் ...

வழக்கு என் னிற்கு பிறகு ஸ்ரீ க்கு மற்றுமொரு பெயர் சொல்லும்படியான பாத்திரம் . நிறைவாக செய்திருக்கிறார் . முன் பின் தெரியாதவனுக்காக
ஒருவன் இவ்வளவு ரிஸ்க் எடுப்பனா என்று தோன்றினாலும் அவனை காப்பாற்ற இவர் படும் பாடு நமக்கே பாவமாக இருக்கிறது .
மிஸ்கின் தன்னைப் பற்றிய பின்னணியை காட்டமால் இடைவேளை தாண்டியும் பயணப்பட்டிருப்பது பலம் . அதே போல பிளாஷ்பேக் எதுவும் வைக்காமல் குழந்தைக்கு கதை சொல்வது போல ஒரே ஷாட்டில் தன் பின்னணியை சொல்லிவிடுவது வித்தியாசமாக இருந்தாலும் ஏனோ நிறைவாக இல்லை . மிஸ்கின் சண்டைக் காட்சிகளில் ரசிக்க வைத்தாலும் உடல் எடை உறுத்துகிறது ...

 

முன்னணி இசை கோர்ப்பு இளையராஜா என்று டைட்டிலில் போடுகிறார்கள் . அதை நிரூபிப்பது போல இசை சில காட்சிகளில் முன்னில் வந்து அதிகப்பிரசங்கித்தனம் செய்தது போல இருக்கிறது . மற்ற படி வசனங்கள் இல்லாத நிறைய இடங்களில் ( குறிப்பாக கல்லறை சீன் , க்ளைமாக்ஸ் ) நம்மை ஒன்ற வைக்கிறது இசைஞானியின் இசை . படம் முடிந்தவுடன் செல்லாமல் பொறுமையாக இருந்தால் டைட்டில் கார்ட் உடன் வரும் இசையில் நனையலாம் . இசைஞானியை தவிர வேறெந்த டெக்னீசியன் பெயரையும் மிஸ்கின் போஸ்டர்களில் போடா விட்டாலும் ஜூனியர் ரங்காவின் ஒளிப்பதிவு சென்னையின் சந்து பொந்துகளில் புகுந்து இரவையும் ரசிக்க வைக்கிறது ...

படத்தின் நீளம் , திரைக்கதையில் பெப் இருந்தாலும் ஸ்லோ மூவிங் காட்சிகள் இப்படி சில குறைகள் இருந்தாலும் டாப் ஆங்கிள் ஷாட்டில் ஆரம்பிக்கும் படம் இடைவேளைக்கு சற்று முன்பு வரை டாப் கியரிலேயே செல்வது , அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைத்தது , ஒரே இரவில் ஓநாய் ஆட்டுக்குட்டியுடன் காட்டுக்குள் நம்மை ஒன்ற வைத்தது போன்ற வகையில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளுக்கு பிறகும் தற்போதைய காமெடி ட்ரெண்டுக்கு மடங்காமல் நம் மனதை வேட்டையாடுகிறார் மிஸ்கின் ...

நந்தலாலா , முகமூடி இரண்டிற்கும் ஓவர் பில்டப் கொடுத்து ஓடாமல் போனதாலோ அல்லது பணப்பற்றாக்குறையாலோ ப்ரோமோ அதிகம் இல்லாமல் தன் படத்தை மட்டும்  பேச வைத்திருக்கிறார் மிஸ்கின் . நிறைய தியேட்டர்களை  ராஜா ராணி ஆக்ரமித்துக் கொள்ள ஓநாய் ஒடுக்கப்பட்டதென்னமோ உண்மை . என்ன தான் மவுத் பப்ளிசிட்டி இருந்தாலும் ரசிகனுக்கு ஏற்ற விதத்தில் ஷோ இல்லாமல் போவதால் என்ன பிரயோஜனம் . உலக நாயகன் முயற்சியால் டி.டி.எச் முறையில் படம் ரிலீஸ் செய்ய அனுமதிக்கபட்டால் தன் படத்திற்கு தானே போஸ்டர் ஓட்டும் நிலைக்கு மிஸ்கின்களும் , இது போன்ற படங்களை தயாரிக்க முன் வந்ததால் கடனாளியாகும் நிலைக்கு முதலாளிகளும் தள்ளப்பட மாட்டார்கள் . மனமிறங்குவார்களா பெரிய முதலைகள் ? ...

ஸ்கோர் கார்ட் : 47

28 September 2013

ராஜா ராணி - RAJA RANI - ரசிக்கலாம் ...

 
ந்த ஒரு படத்திற்கும் மார்க்கெட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை  ராஜா ராணி படத்திற்கு கிடைத்த ஒப்பனிங் மூலம் நன்றாகவே உணர முடிந்தது . ஷங்கரின் உதவி இயக்குனர் அட்லீக்கு இது முதல் படம் என்பதை நல்ல காஸ்டிங்கும் , ஏ.ஆர்.முருகதாசின் தயாரிப்பும் மறக்கடிக்கின்றன ...

காதலியை இழந்த ஜான் ( ஆர்யா ) , காதலனை இழந்த ரெஜினா ( நயன்தாரா) இருவரும் கொஞ்சம் கூட விருப்பமில்லாமல்  திருமணம் செய்து கொள்கிறார்கள் . ஒரு கட்டத்தில் இருவருக்கும் அடுத்தவரது பழைய காதல் வாழ்க்கை  பற்றி தெரிய வர அதை புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்தார்களா ? இல்லையா என்பது படத்தின் கேப்சனை பார்த்தாலே புரியும் ...
 
ஆர்யா வுக்கு  அதிகம் மெனக்கெடாத கேரக்டர் . கிளீன் ஷேவை விட கொஞ்சம் தாடியில் கூடுதல் அழகாக இருக்கிறார் . சந்தானத்துடனான இவரது காம்பினேஷன்  இதில் மீண்டும்  வொர்க் அவுட்  ஆகியிருக்கிறது . நீண்டநாட்களுக்கு பிறகு நயன்தாரா தனக்கு  கிடைத்த நல்ல வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . க்ளோஸ் அப் காட்சிகளில் முகம் கொஞ்சம் பயமுறுத்தினாலும் நடிப்பை  ரசிக்க முடிகிறது . எங்கேயும் எப்போதும் படத்தின் எக்ஸாகரேட்டட் வெர்சன் போல இருந்தாலும் நயனின் பழைய காதலனாக வந்து கிடைத்த அரை மணி நேரத்தில் மனதை அள்ளுகிறார் ஜெய் . விளம்பரங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும் தியேட்டரில் ஜெய்க்கு நல்ல ரெஸ்பான்ஸ் . ஆனால் இவரது கதாபாத்திரமும் , அதற்கான முடிவும் தெளிவில்லாமல் இருப்பது படத்திற்கு மைனஸ் ...
 
 
நயனின் தங்கை போல இருக்கும் நஸ்ரியா  நைட்டியுடன் அறிமுகம் ஆகும் முதல் காட்சியிலேயே நைண்டி போட்டது போல கிறங்க வைக்கிறார் . இந்த படத்திற்கு பிறகு ஆர்யா மேல் சக நடிகர்கள் மேலும் பொறாமைப்படுவார்கள் என்று நம்பலாம் . சந்தானம் இந்த படத்திற்கும் வழக்கம் போல கமர்சியல் நன்பெண்டா . நயனின் அப்பாவாக சத்யராஜ் நல்ல பொருத்தம் . ஜி.வி  ஹாரிஸ் போலவே அங்கங்கே சுட்டிருந்தாலும் பாடல்களை  ஹிட் செய்து விட்டார்  . ஜார்ஜின் ஒளிப்பதிவும் , ரூபனின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம் ...

சிம்பிளான ஒன்லைன் , காதல் படமாக இருந்தாலும் மேக்கிங்கில் உள்ள நேர்த்தி , போரடிக்காத திரைக்கதை , பொருத்தமான காஸ்டிங்  இவற்றின் மூலம் அட்லி குட்லி சொல்ல வைக்கிறார் . ரசிக்க வைத்தாலும் மனதில் ஒட்டாத ப்ளாஷ்பேக் காதல்கள் ,  சொல்லி வைத்தார்ப் போல பழைய காதலை கேட்டவுடன் இருவருக்கும் ஏற்படும் நாடகத்தனமான மனமாற்றம் , எப்படியும் சேர்ந்து விடுவார்கள் என்று தெரிந்து விடுவதால் வரும் சலிப்பு இவையெல்லாம் ராஜா ராணி யை ஆள விடாமல் செய்கின்றன . குறிப்பாக ராஜா ராணி காதலில் உயிர்ப்பு  குறைவாக இருந்தாலும் பொழுது போக்கு அலங்காரத்திற்காக ஒரு முறை ரசிக்கலாம் ...

ஸ்கோர் :கார்ட் : 42
 

27 September 2013

மோடி - MODI - மாற்றம் வருமா ? ...


டந்த மாதம் என்னுடைய பதிவில் மோடி முன்னிறுத்தப்படுவாரா ? ... என்கிற கேள்விக்கு எதிர்பார்த்தது போலவே அவரை பிரதம வேட்பாளராக பி.ஜே.பி அறிவித்ததன் மூலம் தக்க விடையளித்து பத்து நாட்கள் பத்து நாட்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் அவரது தலைமையில் நேற்று திருச்சியில் முதல் மாநாடு பெருந்திரளான மக்கள் கூட்டத்தின் மத்தியில் நடந்து முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது . முதலில் முரண்டு பிடித்த அத்வானி , சுஷ்மா இருவரும் இப்பொழுது ஒத்துப்போனது கட்சிக்குள் இருந்த சிறிய சலசலப்பையும் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்று சொல்லலாம் . மற்ற கட்சிகள் போல ஒரு குடும்பத்தை மட்டும் நம்பியிருந்தால் தலைமைப் பொறுப்புக்கு ஆளை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருந்திருக்காது .என்ன செய்வது பி.ஜே.பி யில் அப்படியொரு சூழல் இல்லாமல் ஜனநாயக முறைப்படி கட்சியை நடத்துவதால் உண்டானதே இந்த சிக்கல் . இப்படி பல சிக்கல்களை கடந்து மோடி பிரதமர் மகுடம் சூட்டுவாரா ? அலசுவோம் ...

கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்ப்பட்டதன் மூலம் முதல் படியை கடந்திருக்கும் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் பல கட்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இரண்டாவது படியை கடக்க வேண்டும் . இப்போதைக்கு அகாலி தள் மற்றும் சிவசேனா மட்டுமே 
நேரடியாக மோடியின் தலைமைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன . ஹரியானாவில் சவுதாலா மற்றும் ஓடிஷாவில் பட்நாயக் இருவரையும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியும் நடந்து கொண்டு தானிருக்கின்றன . தென் இந்தியாவை தவிர்த்து மற்ற இடங்களில் பி.ஜே.பி க்கு வலுவான கூட்டணி தானாகவே அமைந்து விடும் என்று ஓரளவு எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் 180 - 200 இடங்களை தனித்து கைப்பற்றும் கட்சி மத்தியில் பிராந்திய கட்சிகளின் துணையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சரத் பவார் சூசகமாக கருத்து தெரிவித்திருப்பது அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்று தெளிவாகவே காட்டுகிறது ...

தென் இந்தியாவியில் தனித்து ஆட்சியமைத்த கர்நாடகாவை பி.ஜே.பி இழந்ததும் , மற்ற தென் மாநிலங்களில் கட்சியை வளர்க்காததும் அதற்கு பெருத்த பின்னடைவு . எடியூரப்பா கட்சிக்குள்  மீண்டும் இணையாமல் தனித்திருந்த படியே நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருப்பது ஓட்டு வங்கியை அதிகப்படுத்துமா அல்லது மோடியின் இமேஜை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் . பி.ஜே.பி தெலுங்கானாவை ஆதரித்ததால் தள்ளியிருந்த சந்திர பாபு நாயுடு இப்பொழுது நெருங்கி வருவது போல் தெரிகிறது . ஜெகன் மோகன் காங்கிரசை வீழ்த்த பி.ஜே.பி பக்கம் சாயலாம் அல்லது சி.பி.ஐ வழக்கை சமாளிக்க கைக்குள் அடங்கலாம் . தமிழ்நாட்டில் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமையும் பட்சத்தில் 40 லும் வெற்றியை எதிர்பார்க்கலாம் . ஆனால் முதல்வருக்கும் பிரதமர் கனவு இருப்பதால் அது சாத்தியமாகாதது போலவே படுகிறது . சோ வின் முயற்சி பலித்தால் ஏதாவது நல்லது நடக்கலாம் . அப்படி இல்லாத பட்சத்தில் வை.கோ , விஜயகாந்த் , ராமதாஸ் 
போன்றோர் கூட்டணிக்குள் வரும் வாய்ப்பும் பிரகாசமாகவே இருக்கிறது . கேரளாவை பொறுத்த வரை முன்னை விட கட்சி கொஞ்சம் வளர்ந்திருப்பதும்  , மோடியின் தலைமையும் மட்டுமே அதற்கு ஆறுதல் ... 

டிசம்பரில் நடக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் டில்லி  உட்பட மூன்றில் பி.ஜே.பி ஜெயிக்கும் என்று கருத்து கணிப்பு வந்திருப்பது கட்சியினருக்கு தெம்பை கொடுத்திருக்கும் . தமிழ் நாட்டில் ஜூ .வி எடுத்த சர்வேயின் படி மோடி பிரதமராவதற்கு ஆதரவாக 52 சதவீதமும் , மன்மோகன் சிங்கிற்கு 6 சதவீதமும் கிடைத்திருப்பது மக்களின் மன ஓட்டத்தை பிரதிபளிக்கிறது . படித்த இளைஞர்களிடம் மட்டுமின்றி அனைத்து தரப்பிலும் மோடிக்கு ஆதரவும் , அவர் பிரதமாராக வர வேண்டும் என்ற வேட்கையும் இருப்பதை பல இடங்களில் கண்கூடாக காண முடிகிறது . அதே போல மைனாரிட்டிக்கு அவர் எதிரானவர் என்பது போல பரப்பப்படும் பொய் பிரச்சாரங்களை மக்கள் நிராகரிக்க தொடங்கி விட்டார்கள் ...

ஏனெனில் எத்தனையோ முறை காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் குறிப்பாக டில்லி யில் நடந்த சீக்கியர் இனப் படுகொலை மற்றும் அஸ்ஸாம் , குஜராத் மாநிலங்களில் நடந்த இனக்கலவரங்களை பற்றியும் , கலவரங்களுக்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பற்றியும் அவர்கள் தெளிவாக மறந்திருக்கலாம் , ஆனால் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் . இந்த லட்சணத்தில் இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் திரும்ப திரும்ப கோத்ரா கலவரத்தைப் பற்றி பேசப் போகிறார்கள் என்பதே மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய கேள்வி . கடந்த ஒன்பது வருடங்களாக அவதியிலிருக்கும் மக்கள் மோடி வந்தால் மாற்றம் வரும் என்று நம்புகிறார்கள் . ஆனால் அப்படி மாற்றத்தை எதிர்பார்க்கும் அனைவரும் மோடி வருவாரா ? மாட்டாரா என்று ஆராய்வதை விட்டு விட்டு சொந்த் விருப்பு வெறுப்புகளை பார்க்காமல்அவருக்காக ஒட்டு போடுவார்களேயானால் நிச்சயம் 
மாற்றம் வரும் என்று எதிர்பார்க்கலாம் ...



 

27 August 2013

தலைவா - THALAIVAA - TIME TO LEARN ...


ரு படம் சொல்லப்பட்ட தேதியில் ரிலீசாகாமல் ஏதோ ஒரு காரணத்தால் தடை செய்யப்படும் போது அதற்கு இலவச விளம்பரம் கிடைக்கும் என்பதை மறுக்க முடியாது . அதற்கு சமீபத்திய உதாரணம் விஸ்வரூபம் . தமிழகத்தை விடுத்து உலகமெங்கும் படம் ரிலீசானாலும் மற்ற இடங்களில் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்சாலும் , ரசிகர்களின் மனமார்ந்த ஆதராவலும் படம் இரண்டு வாரங்கள் கழித்து ரிலீசாகியும் தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது . ஆனால் அதே வரிசையில் பிரச்சனையில் சிக்கிய தலைவா ஏனோ திக்குமுக்காடி விட்டது ...

மும்பை வாழ் தமிழர்களின் நலனுக்காக பாடுபடும் தாதா அண்ணா (எ) ராமதுரை  ( சத்யராஜ் ) . வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மகன் விஷ்வா
( விஜய் ) வின் கண் முன்னாலேயே அண்ணா இறந்து விட அவர் விட்ட பணியை தொடர தலைமைப் பொறுப்பேற்கும் மகனின் கதையே தலைவா ...


விஜய் வழக்கம் போல ஆட்டத்திற்கு தவிர வேறெதற்கும் அதிகம் மெனக்கெடவில்லை . இவர் வெள்ளை சட்டை , தடிமன் மீசை யுடன் தலைவனாக வரும் பின்பாதியை விட ஆட்டம் பாட்டம் என முன் பாதியில் வரும் நார்மல்  விஜயாகவே அதிகம் கவர்கிறார் . இதுவே கூட படத்திற்கு பெரிய சறுக்கலோ என்று தோன்றுகிறது . அமலா பால் இயக்குனர் விஜய் படங்களில் கூடுதல் அழகாக இருக்கிறார் . அவர் என்ன தான் அடக்க ஒடுக்கமாக வந்தாலும் சிந்து சமவெளி சீன்கள் கண் முன் வந்து நம்மை சீழ் படுத்துகின்றன ...

சத்யராஜ் சண்டைக் காட்சிகளில் வாயை கோணிக் கொள்வதை இன்னும் விடவில்லை . மற்றபடி வயதான தாதா கதாபாத்திரத்தில் கவர்கிறார் . சந்தானம் ஜவ்வென்று இழுக்கும் முன்பாதியை ஜிவ்வென்று ஆக்குகிறார் . சாம் ஆன்டர்சன் அனாவசிய இடைசெருகல் . நாசர் , பொன்வண்ணன் போன்றோர் சரியான தேர்வு . வில்லன் விஷயத்தில் அப்படி சொல்ல முடியவில்லை . ஜி.வி யின் இசையில் " வாங்கன்னா " தாளம் போட  வைத்தாலும் பின்னணி இசை பின்னடைவு . ஒளிப்பதிவு , எடிட்டிங் இரண்டும் படத்திற்கு தேவையான அளவு இருக்கின்றன ...



டைட்டிலிலேயே மணிரத்னம் , ராம்கோபால் வர்மா , ப்ரியதர்சன்  போன்றோருக்கு நன்றி தெரிவித்து தனது முந்தைய படங்கள் போலல்லாமல் கொஞ்சம் நேர்மையை காட்டியதற்காக இயக்குனர் விஜயை பாராட்டலாம் . இன்ஸ்பைர் ஆகி படம் எடுக்கலாம் , அதற்காக சீன்களை கூட புதிதாய் யோசிக்காமல் ஈயடிச்சான் காப்பியா அடிப்பார்கள் ? சாரி விஜய்  . இன்டர்வெல் ப்ளாக் , டேப்பிற்காக வில்லனும் , விஜயும் அலையும் சீன் போன்ற சிலவற்றை தவிர பெரும்பாலும் படம் நீளமாக இழுத்து ஒருவித அயர்ச்சியை தருகிறது ...

ஆய் , ஊய் என்ற சத்தமில்லாமல் ஒரு நாயகன் ஸ்டைல் ஆக்சன்  படத்தை விஜயை  வைத்து இயக்குனர் விஜய் எடுக்க நினைத்ததில் தப்பில்லை . ஆனால் அதை செயல்படுத்தியதில் நிறைய கவனம் செலுத்தியிருக்க வேண்டும் . ஏனெனில் இது போன்ற தாதாயிச படங்களில் இருக்கும் விறுவிறுப்பு படத்தில் டோட்டலி மிஸ்ஸிங் . மணிரத்னம் காட் பாதர் இன்ஸ்பிரேஷனில் எடுத்திருந்தாலும் அடுத்த தலைமுறைக்கு ஒரு ட்ரென்ட் செட்டராக இருந்த படம் நாயகன் . அதே போல நடிகர் விஜய் நடிப்பை மட்டுமல்ல ஒரு பிரச்சனையை நேரடியாக சமாளிக்கும் தைரியத்தையும் கமல்ஹாசனிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் . தலைவா இரண்டு விஜய்களுக்கும் டைம் டு லேர்ன் ...

ஸ்கோர் கார்ட் : 40


25 August 2013

மழலை - எனது குறு குறும்படம் ...


லைஞர் டி.வி யில் ஒளிபரப்பாகும் நாளைய இயக்குனர் போல ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் விளம்பர உலகம் என்றொரு நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள் . இறுதி சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குறும்படத்தின் இயக்குனருக்கு பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்குவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்பதே இதன் சிறப்பம்சம் . இந்த போட்டிக்கான முதல் சுற்றில் எனது குறும்படம் நல்லதோர் வீணை தேர்ந்தெடுக்கப்படவே அடுத்த சுற்றுக்கான போட்டியாக மழைநீர் சேகரிப்பு என்கிற தலைப்பில் அதனை பற்றி விளக்கும் விதமாக இரண்டரை நிமிடங்களுக்கு மிகாமல் ஒரு குறும்படத்தை இயக்க சொல்லியிருந்தார்கள் ...

இது போன்ற நிபந்தனைக்குட்பட்ட போட்டிகளில் நமது சுதந்திரம் பாதிக்கப்படும் அசௌகரியம் இருந்தாலும் நமது திறமையை பரிசோதித்துப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருந்ததால் எனது டீமுடன் களத்தில் இறங்கிவிட்டேன் . முப்பது செகன்ட்களுக்குள் ஒரு விளம்பரம் எடுத்து விடலாம் , அதே போல ஐந்து நிமிடங்களுக்கு குறும்படம் எடுக்கலாம் . ஆனால் இதில் இரண்டரை நிமிடங்களுக்குள் படம் இருக்க வேண்டும் அதே நேரம் அந்த தலைப்பை பற்றிய முழு விளக்கமும் இடம்பெற வேண்டுமென்பதே எனக்கு விடப்பட்ட சவால் . ஒரு வழியாக படத்தை எடுத்து சேனலுக்கு கொடுத்தாகிவிட்டது ..

ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து தகவல் வர நீண்ட நாட்கள் ஆகவே சேனலை தொடர்பு கொண்ட போது தான் நிகழ்ச்சி தயாரிப்பாளர் விலகி விட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது  தெரிய வந்தது . பிறகு நீண்ட தாமதத்திற்கு பிறகு இப்பொழுது தான் யூ டியூபில் ஏற்ற முடிந்தது . இந்த குறு குறும்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய  அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . குறிப்பாக எனக்கு உறுதுணையாக இருந்த இயக்குனர் திரு.ஸ்ரீஹரி மற்றும் பட வேலைகள் இருந்தும் நான் கூப்பிட்டவுடனேயே நடிப்பதற்கு ஒப்புக்கொண்ட திரு.சங்கரநாராயணன் (துப்பாக்கி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்தவர் ) அவர்களுக்கும் எனது மனமார்ந்த  நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் . குறு குறும்படத்தை கீழே பார்க்கவும் ...




18 August 2013

ஆதலால் காதல் செய்வீர் - AADHALAL KADHAL SEYVEER - கவரும்...


கடந்த  ஆண்டே வந்திருக்க வேண்டிய படம் ஏதோ சில காரணங்களால்  தள்ளிப்போய் உதயநிதியின் உதவியால் இப்பொழுது வந்திருக்கிறது . லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக நடந்து கொண்டிருக்கும் விஷயங்களை  மனதில் அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் இயக்குனர் சுசீந்திரன் ராஜபாட்டையால்  தனக்கு ஏற்பட்ட சரிவை சமன் செய்து விட்டார் என்றே சொல்லலாம் ...

கல்லூரி மாணவ மாணவிகளிடையே காதல் என்ற பெயரில் நடக்கும் காம களியாட்டங்களையும் , அதனால் ஏற்படும் விபரீதங்களையும்  கார்த்திக்
( சந்தோஷ் ) , ஸ்வேதா ( மனிஷா ) ஆகிய இருவரின் வாழ்க்கையின் மூலம் ஆபாசமில்லாமல் படம் பிடித்துக்காட்டுவதே " ஆதலால் காமம் சாரி காதல் செய்வீர் " ...


ஹீரோ சந்தோஷ் பக்கத்து வீட்டுப்  பையன் போல என்றெல்லாம்  சொல்ல முடியாத படிக்கு படு சுமாராக இருக்கிறார் . அழகான பொண்ணுங்க அட்டு பசங்களுக்கு தான் மாட்டும் என்றெல்லாம்  லாஜிக் சொன்னாலும் இவரது காஸ்டிங் சறுக்கல் . ஆனால் ஒரு லெவலுக்கு மேல் அவரையும் உற்று கவனிக்க வைப்பதே திரைக்கதையின் பலம் . மனிஷாவுக்கு  வழக்கு எண்ணை விட இதில் வெயிட்டான கேரக்டர் .  கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் . காதல்  காட்சிகளை விட சோக காட்சிகளில் நடிப்பு மிளிர்கிறது . இவர்களுடன் வரும் நண்பர்கள் குழுவும் நம்மை கவனிக்க வைக்கிறார்கள் ...

டெம்ப்ளேட் அம்மாக்களுக்கு மத்தியில் மனிஷாவின் அம்மாவாக வரும் துளசியின் நடிப்பு ரியலி சூப்பர்ப் . மகளிடம் கோபப்படும் போதும் சரி , மகளுக்காக மற்றவர்களுடன் சண்டை போடும் போதும் சரி யதார்த்த அம்மாவை கண் முன் நிறுத்துகிறார் "மகாநதி "  துளசி . இவரது நடிப்புக்கு முன்னால்  நீண்ட இடைவெளிக்குப் பின்  நடிக்க வந்திருக்கும் பூர்ணிமா பாக்யராஜ் , ஜெயப்ரகாஷ் போன்றோர் கொஞ்சம் மறைந்து விடுகிறார்கள். புதுமுகங்களை வைத்து குறைந்த செலவில் எடுக்கப்பட்டிருக்கும் படத்திற்கு யுவனின் இசையும் , சூர்யாவின் ஒளிப்பதிவும் பெரிய பலம் . டைட்டில் பாடல் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது ...


நாடோடிகள் , ராட்டினம் போன்ற படங்களின் சாயல் கதையில் இருந்தாலும் சொன்ன விதத்தில் நம்மை  சொக்க வைக்கிறார் சுசீந்தரன் . புரிதலை விட பைக் இருந்தால் போதும் என்று நினைக்கும் காதலி , காரியம் முடிந்தவுடன் காதலின் வீரியத்தை குறைக்கும்  காதலன் , வேறு வழியில்லாமல் பிள்ளைகளின் போக்கிற்கு தலையாட்டும் பெற்றோர் என்று எல்லா கதாபாத்திரங்களிலும் யதார்த்தத்தோடு அதில் உள்ள சுயநலத்தையும்  தோலுரித்துக் காட்டுகிறது படம் . திரைக்கதை டீட்டைலாக இருக்கும் அதே சமயம் என்ன என்று யோசிப்பதற்குள் படம் முடிந்தும் விடுவது மற்றொரு சிறப்பு ...

க்ளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்று யூகித்திருந்ததால் முடிவு பெரிய ஜெர்க்கை கொடுக்கா விட்டாலும் அதனை சொல்லி முடித்த விதம் நிச்சயம் நெகிழ்ச்சியை கொடுத்தது .  ஹீரோ , கவித்துவமாக இருந்தாலும் சம்பந்தமில்லாத படத்தின் தலைப்பு , திட்டமிட்டு தப்பு செய்பவர்கள் முக்கியமான விஷயத்தில் திட்டமிடாமல் கோட்டை விட்டது ( படத்தின் திருப்புமுனையான அந்த சம்பவம் ஆக்சிடண்டலாக நடந்திருந்தால் இன்னும் யதார்த்தமாக இருந்திருக்கும் ) போன்ற குறைகள் படத்தில் இருந்தாலும் ஏதோ இருவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை நேரில் நின்று பார்த்தது போன்ற ஒரு உணர்வை கொடுத்த விதத்தில் படம் நிச்சயம் பார்ப்பவர்களை கவரும் ...

ஸ்கோர் கார்ட் : 44 

8 August 2013

தலைவா - THALAIVAA - கதை என்ன ? ...


இளைய தளபதி விஜய் , இயக்குனர் விஜய் இருவரும் இணைந்திருக்கும் தலைவா படத்தை எஸ்.ஆர்.எம். க்ரூப் சேர்மன் பாரி வேந்தரின் மகன் மதன் வேந்தர் மூவீஸ் சார்பில் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். நாளை படம் ரிலீஸ் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்   இருக்கும் நிலையில் இரண்டு காரணங்களுக்காக பட வெளியீடு தள்ளிப்போகும் என்று தெரிகிறது ...

முதலாவதாக , எஸ்.ஆர்.எம் க்ரூப்பை எதிர்க்கும் சில மாணவர் அமைப்புகள் தலைவா படம் வெளியிடப்படும் திரையரங்குகளில் பாம் வைப்போம்  என்று தியேட்டர்களுக்கு கடிதம் அனுப்பியதாகவும் , அதை தொடர்ந்து காவல்துறை தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் பட்சத்திலேயே படத்தை வெளியிடுவோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது . அடுத்ததாக தலைவா படம் மும்பை தாராவியில் உண்மையில் வாழ்ந்த எஸ்.எஸ்.கே மற்றும் அவரது புதல்வன் எஸ்.கே.ஆர் ஆகிய இருவரையும் தவறுதலாக சித்தரிப்பதாக சொல்லி அவர்களது வாரிசு படத்தை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருப்பதும் , அதற்கு பதில் விளக்கம் தருமாறு படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியிருப்பதும் படம் நாளை  ரிலீஸ் ஆகாததற்கு காரணமாக அறியப்படுகிறது ...

வழக்கில் குறிப்பிட்டுள்ள படி படத்தின் கதை யாதெனில் மும்பையில் வாழும் தமிழர் தீய வழியில் சம்பாதித்தாலும் அங்கிருப்பவர்களுக்கு நல்லது செய்கிறார் . இது பிடிக்காத எதிரிகள் அவரை கொன்று விடுகிறார்கள் . வெளிநாட்டிலிருந்து வரும் அவரது மகன் தந்தையின் நற்பணியை தொடர்வதோடு அவரை கொன்றவர்களையும் பழி தீர்க்கிறார் .  உண்மையில் இந்த காரணத்துக்காக வழக்கு தொடரப்பட்டிருந்தால் அது மணிரத்னம்  , ராம்கோபால் வர்மா போன்றோர் மீதும் தொடரப்பட்டிருக்க வேண்டும் . ஏனெனில் இதே கதையை தான் அவர்கள் நாயகன் , சர்க்கார் என்று ஏற்கனவே எடுத்துவிட்டார்கள் . அதே கதையை கொஞ்சம் களத்தை மாற்றி கமல் தேவர்மகன் எடுத்துவிட்டார் . இவர்கள் அனைவரின் மீதும் உண்மையிலேயே ப்ரான்சிஸ் போர்ட் தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் . அவர் தான் இது போன்ற படங்களுக்கெல்லாம் அக்மார்க் காட் பாதர் . அவரின் இயக்கத்தில் வெளிவந்த காட் பாதர் தான் மற்ற இயக்குனர்களுக்கெல்லாம் இன்ஸ்பிரேஷன் ...

தனிப்பட்ட ஒரு நபரையோ , சமூகத்தையோ நேரடியாக படம் புண்படுத்தாத பட்சத்தில் மேலும் சிக்கல் இருக்காது  என்று எதிர்பார்க்கலாம் . இந்த பிரச்சனை படத்தின் பப்ளிசிட்டிக்காக செய்யப்பட்ட ஸ்டண்டாகவும்  இருக்கலாம் என்கிறார் விஷயமறிந்த உதவி இயக்குனர். அதே போல விஜய் அரசியலுக்கு வரக்கூடாது என்பதற்காக போடப்பட்ட  முட்டுக்கட்டை என்றும் சொல்கிறார்கள் .  எது  எப்படியோ 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பலரது உழைப்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் படம் வெளி வரவேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு . இந்த வருட ஆரம்பத்தில் இதே போல சிக்கலில் மாட்டிய விஸ்வரூபம் பின்னர் விஸ்வரூப வெற்றியடைந்ததை போல தலைவா தடைகளை தாண்டி மாபெரும் வெற்றி பெறுமா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ...


27 July 2013

பட்டத்து யானை - PATTATTHUYANAI - பழைய யானை ...


முதல் மூன்று படங்களிலேயே தொடர் வெற்றியை கொடுத்து தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கிக்கொண்டவர் விஷால் . இப்பொழுது தொடர் தோல்விகளால் தவித்துக் கொண்டிருப்பவரை பூபதி பாண்டியனின் பட்டத்து யானை தூக்கி விட்டதா ? பார்க்கலாம் ...

காரைக்குடியில் சமையல் கான்ட்ராக்டர் கௌரவத்திடம் ( சந்தானம் ) வேலைக்கு சேரும் சரவணன் ( விஷால் ) அவரது பிசினசை காலி செய்து விட்டு திருச்சிக்கு கூட்டி செல்கிறார் . விஷால் அங்கு ஒரு பெண்ணை
( ஐஸ்வர்யா அர்ஜூன் ) லவ்வ சந்தானத்தை சந்தியில் விட்டு விட்டு ஐஸ்வர்யாவிற்க்காக வில்லன் கோஷ்டியை பின்னி பெடலெடுக்கிறார் . கடைசியில் வழக்கமாக என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து சுபமாய் படத்தை முடிக்கிறார்கள் ...

விஷால் வழக்கம் போல தலைக்கு பதில் முகத்தில் எண்ணெய் வடிய வருகிறார். பார்த்தவுடன் ஒரு பெண்ணை காதலிக்கிறார் , அந்த பெண்ணிற்க்காக தனி ஆளாக ஊரையே அடிக்கிறார் , அதிலும் முதலில் தனியாக வரும் அடியாள் இவரிடம் இடது கன்னத்தில் அடி வாங்கி வலது பக்கம் பறந்து விழுகிறான் . வழக்கம் போல இவருக்கு ஒரு மொக்கை ப்ளாஷ்பேக் . இந்த வழக்கமான வழக்கங்களில் பொறுமையை சோதிக்கும் பஞ்ச்கள் இல்லாதது மட்டும் பெரிய ஆறுதல் ...


ஹீரோயின் அறிமுகத்தின் போது புன்னகைத்துக் கொண்டே வரவேண்டுமென்று விதியோ என்னமோ ! . ஆனால் இதில் அதற்காக ஐஸ்வர்யா பஸ் ஏறுவதற்காக ஓடி வரும் போதும் இளித்துக் கொண்டே வருவது லூசோ என்று எண்ணத்தோன்றுகிறது . பள்ளிக்கூட மாணவியாக காட்டினாலும் முகத்தில் முதுமை தெரிகிறது ...

கிரி படத்தில் வடிவேலுவுக்கு என்ன வேடமோ அதே தான் சந்தானத்துக்கும் . இதில் பேக்கரிக்கு பதில் ஹோட்டல் . மொட்டை ராஜேந்திரனுடன் இவர் காம்பினேஷன் வழக்கம் போல கல கல . இவர் உடல் மொழியில் கவுண்டமணியின் இமிடேஷன் இதில் ஓவராகவே இருக்கிறது . பட்டத்துயானை முதல் பாதியில் இவரை வைத்து நன்றாகவே சவாரி செய்திருக்கிறது . ஜான் விஜய் மற்றும் அவரது அடியாட்கள் , மயில்சாமி போன்றோர் சிரிக்க வைக்கிறார்கள் . நண்டு ஜெகனை  இன்னும் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது . அதே போல தடையர தாக்க வில் நல்ல அறிமுகம் கிடைத்த வில்லனை இதில் வீணடித்திருக்கிறார்கள் ...


தமன் இசையில் 20 - 20 பாடல் மட்டும் ஹம்மிங் செய்ய வைக்க மற்றதெல்லாம் ஸ்பீட் ப்ரேக்கர்ஸ் . பின்னணி இசைக்கு இசைஞானி , எம்.எஸ்.வி இருவரும் கை கொடுத்திருக்கிறார்கள் . ஆனால் டைட்டிலில் பெயர் சபேஷ் முரளி என்று வருகிறது . படத்தின் கதை இதற்கு முன் பூபதிபாண்டியன்   எடுத்த மலைக்கோட்டை யை நினைவுபடுத்தினாலும் கிரி வலம் வந்திருக்கிறார்கள் ...

திருச்சியில் தனியாக தவிக்கும் சந்தானத்தின் காமெடி , அது தவிர வில்லன் கோஷ்டியை வைத்து காமெடி செய்த விதம் , போவது தெரியாமல் போகும் முதல் பாதி , ஆக்சன் படங்களில் குறிப்பாக விஷால் படங்களில் வரும் வளவளா பஞ்ச் வசனங்களை தவிர்த்திருப்பது போன்றவை பட்டத்துயானையை பவனி வர வைக்கின்றன ...

கதை , லாஜிக் இதையெல்லாம் தவிர்த்து விட்டு பார்க்கும் போது இந்த படத்திலும் ரசிக்கும் படியாக கமர்சியல் எலிமென்ட்ஸ் சரியாக பொருந்தியிருந்தாலும் தேவையேயில்லாமல் இரண்டு வில்லன் கோஷ்டி, இரண்டாம் பாதியில் சென்டிமென்ட் என்ற பெயரில் திணிக்கப்பட்ட எந்தவித பாதிப்பையும் ஏற்ப்படுத்தாத ப்ளாஷ்பேக் , பெண்ணை பார்த்தவுடன் ரேப் செய்யும் வில்லன் , பழி வாங்கும் ஹீரோ , மலைக்கோட்டை , கிரி போன்ற படங்களை கலந்து கட்டிய கதை இவையெல்லாம் சந்(தா)ன காப்பு செய்தும் பட்டத்துயானையை பழைய யானையாகவே காட்டுகின்றன ...

ஸ்கோர் கார்ட் : 40


Related Posts Plugin for WordPress, Blogger...