25 January 2013

விஸ்வரூபம் ...


ன்று இந்நேரம் விஸ்வரூபம் படத்திற்கான விமர்சனத்தை எழுதிக் கொண்டிருக்க வேண்டிய நான் படம் ரிலீசாகாமல் தடை செய்யப்பட்ட விவகாரத்தை பற்றி எழுதிக்கொண்டிருப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.  விஸ்வரூபம் என்று தன் படத்திற்கு கமல்ஹாசன் எந்த நேரத்தில் பெயர் வைத்தாரோ தெரியவில்லை படம் வெளிவருவதற்கு முன்னரே எக்கச்சக்க பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்து ஆட ஆரம்பித்து விட்டன  .

படம் திரையரங்குகளில் வருவதற்கு முன்னரே டி.டி.எச் இல் திரையிட கமல் வகுத்த திட்டம் திரையரங்கு உரிமையாளர்களின் குறுக்கீடுகளால் தவுடுபொடியானது . ஜனவரி 11 வரவேண்டிய படம் ஒரு வழியாக பல சமரச முயற்சிகளுக்கு பிறகு ஜனவரி  25 இல் தியேட்டர்களிலும் , பிப்ரவரி 2 இல் டி.டி.எச் இலும் ரிலீஸ் என்று முடிவு செய்யப்பட்டு தியேட்டர்களில் ஒரு வாரத்திற்கான டிக்கட்டுகளும் புக் செய்யப்பட்டுவிட்டன.  இந்த நிலையில் பிரத்தியேகமாக தங்களுக்கு காட்டப்பட்ட படத்தின் ப்ரிவியு வை பார்த்து விட்டு அது இஸ்லாமியர்களையும் , இஸ்லாமிய மதத்தையும் தவறுதலாக சித்தரிக்கிறது என்று சொல்லி படத்தின் ரிலீசை தடை செய்யக்கோரி ஒரு அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் 15 நாட்களுக்கு படத்தின் ரிலீசி ற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டதும் , அதை எதிர்த்து கமல் கொடுத்த்த மனுவை விசாரித்த நீதிபதி 26 ஆம் தேதி படத்தை பார்த்து விட்டு 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சொல்லியிருப்பதும் யாவரும் அறிந்ததே.

கமல் மட்டுமல்லாமல் அந்த படத்தை காண ஆவலாக காத்துக் கொண்டிருந்த கோடானு கோடி  தமிழர்களும்   இதற்கான தீர்ப்பை எந்த நேரமும் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கும் வேளையில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு , சென்சார் செய்யப்பட்டு , வினியோகஸ்தர்களாலும் , தியேட்டர்காரர்களாலும்  பல கோடி செலவில் வாங்கப்பட்டு , படம் பார்க்க விரும்புகிறவர்களால் புக் செய்யப்பட்டு இன்று ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய படத்தை  சட்டம் ஒழுங்கு குலையும் என்கிற ஒரு காரணத்தை சொல்லி அரசு தடை செய்திருப்பது கமலை மட்டுமல்ல நல்ல சினிமாவை நேசிக்கிற ஒவ்வொருவனையும் பெரிய வேதனைக்கு உள்ளாக்கியிறுக்கிறது .

இந்த நடவடிக்கை விஸ்வரூபம்   படத்தை தடை செய்யவேண்டுமென்று ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமே திரண்டு வந்தது போல ஒரு மாயையை ஏற்படுத்துகிறது . ஏனெனில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் மலேசியா விலேயே படம் ரிலஸ் ஆகியிருப்பதொடு அனைவரின் வரவேற்ப்பையும் பெற்றிருப்பதே உண்மை  . 28 ஆம் தேதி தீர்ப்பு கமலுக்கு சாதகமாக இருந்து படம் ரிலீசானாலும் இந்த 3 நாள் விடுமுறையில் கிடைத்த ஒப்பனிங் கிடைப்பது சந்தேகமே , அதோடு மட்டுமல்லாமல் படம் வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகி விட்டதால் திருட்டு வி.சி .டி வந்து வியாபாரத்தை கெடுக்கப் போவதும் உறுதி .

இதெல்லாம் தெரிந்தும் படம் தடை செய்யப்பட்டிருப்பதை பார்க்கும் போது அதற்குண்டான நியாயமான காரணத்தை ஆராய வேண்டியதும் நம் கடமை . படம் மிலாடி நபி அன்று ரிலீஸ் ஆக இருந்ததும் , அதற்கு அடுத்த நாள் குடியரசு தினம் என்பதால் காவல் துறையின் கவனமெல்லாம் அங்கிருக்கும் என்பதாலும் , பட ரிலீசிற்க்கு  பிறகு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் காவல் துறையால் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தாமல் முடியாமல் போவதற்கு நிறைய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது . அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய அமைப்பினர் படத்தை பார்த்து விட்டு கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதையும்  மறுக்க முடியாது .


கமலுக்கும் , சர்ச்சைக்கும் தூரமில்லை எனவே இது கூட ஒரு பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்றும் , கமல் புத்தக வெளியீட்டு விழாவில் ப.சிதம்பரத்தை அடுத்த பிரதமர் என்கிற அளவிற்கு பேசிவிட்டார் அதற்கு கிடைத்த பரிசு தான் இது எனவும் சிலர் கூறுகிறார்கள் . தன்  வளர்ச்சியில் இத்தனை  நாள் கூட இருந்த விநியோகஸ்தர்களையும் , தியேட்டர் உரிமையாளர்களையும் தன் சுய லாபத்துக்காக ஒரு நொடியில் கமல் மறந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டும் அவர் மேல் வலுவாக இருப்பதால் திரையுலகில் நிறைய பேர் இதை கண்டுகொள்ளவில்லை என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்  .

ரோஜா விற்கு பிறகு கடந்த இருபது ஆண்டு காலமாகவே இஸ்லாமியர்கள் படங்களில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள் , அதனால் ஏற்பட்ட அதிருப்திகளின் வெளிப்பாடே இந்த எதிர்ப்புக்கு காரணம் என்பது ஒரு சாரரின் வாதம்  . இது போல எவ்வளவோ காரணங்களை அலசினாலும்    ஒரு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமா வேண்டாமா என்பதை நிர்ணயம் செய்ய வேண்டிய   சென்சார் போர்டே படத்தை பார்த்து விட்டு  யு  ஏ சான்றிதழ் கொடுத்த பிறகு இது போன்ற  தடை தேவை தானா என்பது நம் கண் முன் நிற்கும் இமாலய கேள்வி .

படத்தை பார்க்காததால் அது எந்த வகையில் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவது போல அமைந்துள்ளது என்பதை பற்றி கருத்து கூற முடியாவிட்டாலும் கமல் அதை இஸ்லாமிய அமைப்பினருக்கு ரிலீசுக்கு முன்னரே போட்டுக்காட்டியதையும் , தடை செய்யக்கோரி சில அமைப்பினர்  மட்டுமே முனைப்பு காட்டி வருவதையும்  வைத்து பார்க்கும் போது படம் நிச்சயம் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக இருக்காது என்கிற நம்பிக்கை இருக்கிறது .

அதோடு மட்டுமல்லாமல் ஒரு சினிமாவை பார்த்து விட்டுத்தான் ஒருவன்  சமூகத்தின் மீதான பார்வையை வகுத்துக்கொள்கிறான் என்று சொல்ல முடியாது . பொழுதுபோக்கையும் மீறி சினிமாவை ரசிக்கலாம் , ஆராதிக்கலாம் அதற்காக அதில்  காட்டுவதெல்லாம் நிஜம் என்று யாரும் நினைக்க மாட்டார்கள் .  ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்னரும் இப்படி திரையிட்டு ஒப்புதழ் பெற வேண்டுமென ஒவ்வொரு அமைப்பினரும் எதிர்பார்த்தால் யாருமே சினிமா எடுக்க முடியாது...
.
" இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் " என்கிற படம் அமெரிக்காவில் ரிலீசாகி உலகமெங்கும் பெரிய சர்ச்சையையும் , வன்முறையையும் ஏற்படுத்தியது . வன்முறை தவறென்றாலும் அதற்க்கெதிரான போராட்டங்கள் நியாயமானதே என்று படம் பார்த்தவர்கள் சொன்னார்கள் . ஆனால் படம் பற்றி சிறிதும் அறிந்திராதவர்கள் கூட  உலக அளவிலான எதிர்ப்புக்கு பிறகே படத்தை பார்த்திருக்கிறார்கள் . அதே  போல துப்பாக்கி படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது  சில சீன்களை நீக்க சொல்லி ஆர்ப்பாட்டம் நடந்தது . அதற்கு அடிபணிந்து சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்டதோடு படத்தின் சில சீன்களையும் நீக்கினார்கள். இந்தியாவில் வேறங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் மட்டும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது  நாமிருப்பது தமிழ்நாட்டில் தானா என்கிற  அச்சத்தை நிறைய பேருக்கு கொடுத்திருக்கிறது  ...

ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை சொல்லி படங்களை முடக்க நினைத்தால் இந்த துறையை நம்பியிறுக்கும் லட்சோப லட்ச மக்களின் எதிர்காலம் என்னவாவது என்கிற கவலையும் நம்மை தொத்திக் கொள்கிறது . எப்படி தனது ஆக்கங்கள் எந்தவொரு சாதியையோ , மதத்தையோ , இனத்தையோ , சமூகத்தையோ இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு கலைஞனின் கடமையோ அதே போல சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டியதும் பொது மக்களின் கடமை . இதற்கான எல்லைகளை அவரவர்கள் மீறும் போது  பிரச்சனை வெடிக்கிறது ...


பணத்தால் மட்டுமல்லாமல் , மனதாலும்  பாதிக்கப்பட்டுள்ள கமல் தனது அறிக்கையில் " நான்  இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிரானவன் அல்ல , படத்தை பார்த்து விட்டு பாராட்டியவர்கள் பிறகு ஏன் எதிர்க்கிறார்கள் என்று தெரியவில்லை , நான் ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபடும்
" இந்தியா ஹார்மோனி " என்கிற அமைப்பில் இருக்கிறேன் , இந்த படத்தை சுய லாபத்துக்காக சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள் , எனவே இந்த படத்திற்கான தடையை நீக்க வேண்டும் " என்று மனமுறுக கேட்டுக் கொண்டுள்ளார் . இது வரை திரையுலகில்  யாரும் வாய் திறக்காத வேளையிலே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கமலுக்கு ஆதரவுக்கரம்  நீட்டியுள்ளார் ...

இவரையும் , பிரகாஷ்ராஜையும்  தவிர கமல் தான் எங்களுக்கு முன்னோடி , குரு என்றெல்லாம் ஆஹோ , ஓஹோ வென்று புகழும் யாரும்  வாயே திறக்காதது ஆச்சர்யமே . எழுத்தாளர்களில் ஞானியும் , முஸ்லீமாக இருந்தாலும் மனுஷ்யபுத்திரனும்  இந்த தடையை வன்மையாக கண்டித்துள்ளார்கள்  .

சினிமாவில் கதைக்கேற்றவாறு காட்சிகளை அமைப்பது ஒவ்வொரு கலைஞனின் கடமை . அது ஒரு தரப்பினருக்கு அதிருப்தியாக இருக்கும் பட்சத்தில் அதை சமரசமாக பேசித் தீர்த்து சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க சொல்லலாமே தவிர இது போன்ற முழு தடையை கோருவது கருத்து  சுதந்திரத்துக்கு முற்றிலும் எதிரானது . எல்லா தரப்பையும் அலசி ஆராய்ந்த பிறகு தான் சென்சார் போர்ட் ஒ.கே சொல்கிறது அதையும் மீறி மாநில அளவில் படத்தை எதிர்ப்பதை விட்டு விட்டு சென்சார் போர்டுக்கு தங்களின் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியதே நியாயமான செயல் என்றும் பத்திரிக்கைகளும் , டி .வி மீடியாக்களும் சுட்டிக் காட்டுகின்றன ...

இது  ஏதோ கமல் மற்றும் அவர் ரசிகர்கள் சம்பந்தப்பட் பிரச்சனை  மட்டும் என்று நினைத்து ஒதுக்கி விட முடியாது . ஏனெனில் இந்த பிரச்சனை  நாளை குடியரசு தினத்தை கொண்டாடவிறுக்கும் ஒவ்வொரு குடிமகனின் கருத்து சுதந்திரத்துக்கும் விடப்பட்டிருக்கும் சவால் . கமல் போல சட்டத்தை மட்டுமே நம்பியிருக்கும் கோடானு கோடி இந்தியர்களும் இதற்கான தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள் . சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதற்காக படத்தை தடை செய்யும் தைரியமான முடிவை எடுத்த தமிழக அரசு அதே போல நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு படம் வெளியிடப்பட்டால்  இதே போன்றதொரு நடவடிக்கையை எடுத்து படத்தை காண வருபவர்களுக்கு  எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கை அனைவருக்கும் நிறையவே இருக்கிறது . அந்த நம்பிக்கையுடன் கமலோடு சேர்த்து நாமும் காத்திருப்போம் ...


9 comments:

Padman said...

நடுநிலைமையோடு பிரச்சினையை அலசி ஆராய்ந்துள்ள நல்ல கட்டுரை. அதேநேரத்தில் கருத்துச் சுதந்திரம், பகுத்தறிவு என்றெல்லாம் ஆர்ப்பரிப்பவர்கள் கமலை கண்டுகொள்ளாமல் விட்டது ஆச்சர்யம் தருகிறது. தீவிரவாதத்தை உண்மையிலேயே எதிர்க்கும் நடுநிலை முஸ்லிம்கள், தங்கள் பெயரைச் சொல்லி ஆட்டம்போடும் சிற்சில ஆர்ப்பாட்டக்காரர்களை இனியாவது தைரியமாக கண்டிக்க வேண்டும். இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் சகோதர முஸ்லிம்களைக் கொள்வது பயங்கரவாத இஸ்லாமிய அமைப்புகள்தான் என்ற உண்மையை உணர்ந்து, தீவிரவாதத்தை மட்டுமல்ல, தீவிரவாதத்தை ஆதரிக்கும் போக்கையும் அவர்கள் எதிர்க்க முன்வர வேண்டும்.

ராஜ் said...

நல்ல பதிவு பாஸ். படம் ஜிஹாத் போராளிகளை பற்றிய விளக்கமாக சொல்கிறது. உண்மையில் தீவிரவாதிகள் தான் படத்தை எதிர்க்க வேண்டும், இந்திய முஸ்லிம்கள் அல்ல.

Anonymous said...

!)ஒருவர் எப்படி வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் அது அவருடைய கருத்து சுதந்திரம் என்று வாதிடும் நியாயவான்களே டாம்999 படத்தில் முல்லைபெரியாறு ஆணை உடைவதாக கற்ப்பனையாகத்தனே ஒருவன் சித்தரித்தான்.அது அவனுடைய கருத்து சுதந்திரம் ஆனால் அதனை கண்டு கொந்தளித்தவர்களில் நானும் ஒருவன்.அப்போது எழுந்த தமிழனின் கோபம் இதுபோன்றுதான் கொச்சை படுத்தப்பட்டதா?

2)குஜராத் கலவரத்தில் நடந்த கொடுமைகளை மையபடுத்தி எடுக்கப்பட்ட பர்ஜானியா,பிராக் போன்ற படங்கள் சமூக ஒற்றுமையை சீர்குலைத்துவிடும் என்று தடைசெய்யபட்டதே அப்போது கருத்துசுதந்திரம் பற்றி பேச யாரும் முன்வரவில்லையே?

3)கமல்ஹாசனின் மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் நல்லவர்களே இதே கமல் நாளை பகவகீதையை தீவிரவாத நூலாகவும்,கோவில்கள் ஆசிரமங்களை தீவிரவாதபயிற்சி முகாம்களாகவும்,ஹிந்துக்களை தீவிரவாதிகளாகவும் சித்தரித்து படம் எடுத்தால் அதனை கண்டித்து நிச்சயம் பெரும்பாலான ஹிந்து சகோதரர்கள் வீதிக்கு வருவார்கள்.அவர்களை கண்டித்து ஸ்டேடஸ் போட தைரியம் இருக்கிறதா?

4)நம்முடைய கண்களுக்கு வேண்டுமானால் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைகளாக தெரியலாம்.ஆனால் அந்நாட்டுமக்களின் பார்வையில் அது ஒரு தீவிரவாதத்திற்கு எதிரான அரசின் சுதந்திரப்போர்.அதில் உயிரிழந்த அந்நாட்டு ராணுவத்தினர் தியாகிகள்.கமல்ஹாசன் ஒருவேளை சிங்கள படையின் தளபதியாக பொறுப்பேற்று ஈழப்புலிகளை வேட்டையாடி இலங்கையை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதுபோல் படமெடுத்தால் அதனை இருகரமேந்தி வரவேற்க நீங்கள் தயாரா?

5)சர்வதேச அரங்கில் இந்தியாவை தலைகுனியவைத்த 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் நடந்த சம்பங்கள் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு சுவாரஸ்யம் உள்ளவை.ஆனால் அதில் தொடர்புடைய அரசியல் தலைவர்களை மையபடுத்தி ஒரு படம் எடுக்க எந்த சினிமாகாரனிற்க்காவது தைரியம் உள்ளதா?

6)உசாமா இரட்டை கோபுரத்தை தகர்த்தார் என்று சொல்லி லட்சகணக்கான அப்பாவி மக்களின் மீது அமெரிக்கா வீசிய குண்டில் தன் குடும்பத்தை இழந்த அப்பாவி ஆப்கான் இளைஞன் அமெரிக்க ராணுவத்தை பழிக்குபழி வாங்குவதாக படம் எடுத்து அதில் அப்கான் இளைஞனாக நடிக்க கமல் மட்டுமல்ல எந்த கலைகூத்தாடிக்காவது தைரியம் இருக்கா?

7)வெறும் 20 பேர் மிரட்டலுக்கு அரசு பணிந்து படத்தை தடைசெய்வதா?என்று சிறுபிள்ளைதனமாக ஒருவர் கேள்விகேட்க்கிறார்.சுமார் 80 லட்சம் முஸ்லீம் மக்கள் வாழும் தமிழகத்தில் அவர்கள் நடத்தும் போராட்டம் என்பது இவருக்கு இவ்வளவு அற்பமாக தெரிகிறது.முடிவுகளை எடுப்பதில் மிகவும் உறுதியானவர் முதல்வர் ஜே என்பது சிறுபிள்ளைக்குகூட தெரியும்.அப்படி பட்டவர் இந்த விஷயத்தில் இப்படி ஒரு தடை முடிவை எடுத்திருக்கும்போதே அதன் தாக்கம் என்ன என்பது இவருக்கு தெரியவில்லையா?

ஒருவரின் கலைசுதந்திரம் காக்கப்படவேண்டும் என்றுபேச ஒருவேளை மெய்ஞானம் தேவைப்படலாம். ஆனால் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனஉணர்வுகளை புரிந்து கொள்ள கொஞ்சம் மனிதாபிமானம் போதும்....

Padman said...

இந்தியாவில் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரா? அல்லது அடக்கி ஆண்ட பரம்பரையின் எச்சம் என்று நினைத்துத் திரிபவர்களா?

நேரடி நடவடிக்கை என்ற பெயரில் படுகொலை செய்தும், பலாத்காரம் செய்தும் நாட்டை வெட்டிப் பிரித்துவிட்டு, இன்னமும் பாக்கிஸ்தான் என்ற நாட்டின் மூலம் இந்தியா மீது தீவிரவாதத்தை ஏவி விடுபவர்கள் நம்மவர்களா? இல்லை எதிரிகளா? (உண்மையான இந்திய முஸ்லிம் எந்தப் பக்கம் இருக்க வேண்டும்?)

குஜராத் கலவரத்தைச் சுட்டிக்காட்டி கண்டிக்கும் அறிவுஜீவிகளும், இஸ்லாமிய சகோதரர்களும் அதற்குக் காரணமான கோத்ரா ரயில் எரிப்பு சம்வத்தி இதே காட்டத்தொடு கண்டித்தார்களா? அப்படி கண்டித்திருந்தால் இந்தக் கலவரம் மூண்டிருக்குமா?

இரட்டைக் கோபுரத்தை ஆப்கன் தீவிரவாதிகள் தகர்த்தபோது இது மனிதத்தின் மீது நடந்த கோரத் தாக்குதல் என்று நடுநிலை முஸ்லிம்கள் கண்டித்தார்களா? ஆஹா, அவர்கள் நாட்டு விமானத்தைக் கொண்டே அவர்கள் நாட்டுக் கட்டடத்தை இடித்து சர்வநாசம் செய்த பராக்கிரமசாலிகள் என்று புகழ்ந்த ஒரு சிறு கூட்டம், அது பற்றிய ஒரு படப்பிடிப்புக்கு இப்படிப் படம் எடுப்பது ஏன்?

காஷ்மீரில் இருந்து சொந்த நாட்டு மக்கள், பண்டிட்டுகள், படுகொலை செய்யப்பட்டு விரட்டி அடிக்கப்பட்டபோது, இப்போது நடுநிலை, ஜனநாயக உரிமை, ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை என்று பேசும் ஒருசில இஸ்லாமியர்களும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஓட்டுப்பொறுக்கிகளும் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

எல்லா விஷயங்களிலும் முஸ்லிம் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும், இந்தியனாகவோ, சக மனிதனாகவோ இருந்துவிடக்கொடாது என்று அவர்களை திசைதிருப்பும் ஒருசில காலிக் கும்பல் தான் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் ஓங்கி எழுந்த குரலா? தீவிரவாதத்தை ஆதரிப்பதுதான் ஒவ்வொரு இஸ்லாமியனின் பிறவிக் கடமையா?

மனிதாபிமானம் பேசும் மகத்தான மனிதர்களே, தலிபான்கள், மனிதர்களை கழுத்தை அறுத்துக் கொன்றதை, இப்போது இந்திய வீரர்களையும் அதுபோல் பாகிஸ்தான் படையினர் கொன்றதை எப்படிக் கருதுகிறீர்கள்?

இன்றைய முதலமைச்சர் மதமாற்றத் தடைச் சட்டம் முன்பு கொண்டு வந்தது சரியான நடவடிக்கை தானே? அதை ஏன் எதிர்க்க வேண்டும்? மதத்தைப் பின்பற்ற உரிமை உள்ளது? அடுத்தவர்களை மயக்கியோ, மசியவைத்தோ, அச்சுறித்தியோ மதம் மாற்ற யார் உரிமை தந்தது? சுமேரிய கலாசாரம் பிறந்த ஈராக்கும், பாரசிக மதம்-கலாச்சாரம் தழைத்த ஈரானும், காந்தாரக் கலை - பௌத்தம் பரவிய ஆப்கானிஸ்தானும் மதமாற்றத்துக்குப் பின் எப்படி மாறியது, நம் கண் முன்னுள்ள வரலாறு தானே? இதற்கெல்லாம் யார் காரணம்? சுய பரிசோதனை செய்தால் உண்மை புரியும், உண்மை கசக்கத்தான் செய்யும்.


ananthu said...

சரியாக சொன்னீர்கள் பத்மன். நிச்சயம் தன்னை பகுத்தறிவாதி என்று கூறிக்கொள்ளும் கமல் உண்மையான பகுத்தறிவாளர்கள் இப்பொழுது எங்கே போனார்கள் என்று யோசிக்க வேண்டும் . பகுத்தறிவுவாதிகளை பொறுத்த வரை இந்து மதத்தையும் , கடவுள்களையும் தாக்குவது மட்டுமே குறிக்கோள் ...

ananthu said...

ராஜ் said...
நல்ல பதிவு பாஸ். படம் ஜிஹாத் போராளிகளை பற்றிய விளக்கமாக சொல்கிறது. உண்மையில் தீவிரவாதிகள் தான் படத்தை எதிர்க்க வேண்டும், இந்திய முஸ்லிம்கள் அல்ல.

படத்தை பார்த்து விட்டு முஸ்லீம் நண்பர்கள் கூட இதைத்தான் சொல்கிறார்கள் . அரசியல் சதுரங்கத்தில் பகடையாகி விட்டார் கமல் என்பதே வருத்தற்குரிய உண்மை ...

ananthu said...

உங்களின் கேள்விகளுக்கு பதிலாக ஒரு பதிவே போட்டுவிட்டேன் பார்க்கவும் ...

ananthu said...

பத்மன் உங்கள் பின்னூட்டத்தில் காட்டம் அதிகமாக இருந்தாலும் அனைத்தும் உண்மைகளே , நீங்கள் முன்னமே சொன்னது போல உண்மைகள் கசப்பானவை . இந்தியாவில் இந்து - முஸ்லீம் சேர்ந்து விடக்கூடாது என்பதில் நிறைய பேர் குறியாக இருக்கிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம் ...

ananthu said...

ராஜ் said...
நல்ல பதிவு பாஸ். படம் ஜிஹாத் போராளிகளை பற்றிய விளக்கமாக சொல்கிறது. உண்மையில் தீவிரவாதிகள் தான் படத்தை எதிர்க்க வேண்டும், இந்திய முஸ்லிம்கள் அல்ல.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ...!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...