படத்தை பார்த்து இரண்டு நாட்களாகி விட்டது . இருந்தாலும் பிரபல பதிவர் என்பதையும் தாண்டி 2013 பதிவர் சந்திப்பின் பயனாக தனிப்பட்ட முறையிலும் நன்கு தெரிந்தவரான கேபிள் சங்கரின் படத்தை விமர்சிக்கலாமா ? வேண்டாமா என்பதில் சின்ன தயக்கம் . கடைசியில் தனது பட்டவர்த்தமான விமர்சனங்களின் மூலம் பல இயக்குனர்களின் படங்களை கிழித்துக் காயப் போட்டவரின் முதல் படத்தை விமர்சிக்காமால் விட்டு விட்டால் அது காலச்சொல் ஆகிவிடாதா ?! . இனி ...
ஒரு அமைச்சர் ( பிரமிட் நடராஜன் ) சாலை விபத்தில் இறப்பதிலிருந்து தொடங்குகிறது படம் . அது கொலையா ? விபத்தா ? என்று போலீஸ் விசாரணை செய்யும் த்ரில்லர் ட்ராக் ஒரு புறம் . ஐ.டி கம்பெனி எச்.ஆர் சிவா
( தமன்குமார் ) , கால் சென்டர் சேல்ஸ் கேர்ள் மது ( அருந்ததி ) இருவரும் பார்த்துக் கொள்ளாமலேயே செல்போனில் லவ்விக்கொள்ளும் ரொமாண்டிக் ட்ராக் மறுபுறம் என இடைவேளை வரை செல்லும் படம் கொலைகளை விபத்து போல திட்டமிட்டு செய்யும் கொலைகார கும்பலிடம் வழிய சென்று மது மாட்டிக்கொண்டவுடன் நேர்கோட்டில் பயணிக்கிறது ...
ஐ,டி யில் வேலை செய்பவராக கனகச்சித பொருத்தம் தமன் . இவருக்கு சொந்த குரலா ? டப்பிங்கா என்று தெரியவில்லை . ஆனால் வாய்ஸ் கம்பீரம் . மற்றபடி பெரிதாக மெனக்கெடாமல் அளவாக நடித்திருக்கிறார் தமன்குமார் . இரண்டு படங்களில் ஏற்கனவே நடித்திருந்தாலும் இந்த படம் அருந்ததிக்கு நல்ல ப்ரேக் . இவரை சுற்றியே நடக்கும் கதையில் முடிந்த வரை ஸ்கோர் செய்கிறார் . முகம் கொஞ்சம் முத்தலாக இருப்பதாலோ என்னமோ சோகக் காட்சிகள் கை கொடுக்கும் அளவிற்கு இவருக்கு காதல் காட்சிகள் கை கொடுக்கவில்லை . இவருடைய கேரக்டர் ஸ்கெட்சில் இருக்கும் குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் ...
" அடுத்தடுத்து பஞ்ச் சொல்ல நான் என்ன சந்தானமா ? " என்று கேட்டாலும்
" பொண்ணுங்க கார் மாதிரி , இருக்குறவனுக்கு செலவு , இல்லாதவனுக்கு கனவு " , " கடலை போடுறது கருவாடு மாதிரி , ஊரெல்லாம் நாறினாலும் போடுறவனுக்கு மட்டும் மணக்கும் " என்று படம் நெடுக பஞ்ச்களை அள்ளித் தெரிக்கிறார் பாலாஜி . முதலில் ரசிக்கும் படியாக இருந்தாலும் முதல் பாதி முழுவதையும் இவர் தோள்களில் சுமத்தியிருப்பது ஓவர் டோஸ் . கேபிளுடன் சேர்ந்து கார்க்கி எழுதியிருக்கும் வசனங்கள் க்யூட்டாக இருந்தாலும் சந்தானத்திடம் இருக்கும் டைமிங் பாலாஜிக்கு மிஸ் ஆவதால் நல்ல வசனங்கள் கூட ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுவது துரதிருஷ்டம் . " கேட்குறது பெர்சனல் லோன் , அதுக்கு ஏன் அபிசியலா பேசணும் " என்று பாலாஜி போனில் கலாய்ப்பதை உதாரணமாக சொல்லலாம் ...
பி.சி சிவனின் இசையில் " பாஸு பாஸு " , " பெண்ணே பெண்ணே " பாடல்கள் ரம்யம் . சேசிங் சீன்களில் மட்டும் பின்னணி இசையை கவனிக்க வைக்கிறார் . ஈ.சி.ஆர் ரோடுகளில் ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்கின் டாப் ஆங்கிள் ஷாட் கவர்கிறது . எடிட்டிங்கில் சாய் அருண் தூங்கி விட்டாரா இல்லை இயக்குனர் தூங்கி விட்டாரா என்று தெரியவில்லை ...
தன் முதல் படத்திற்கு நாவல் போல இன்ட்ரெஷ்டிங்கான இந்த கதையை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குனருக்கு கை குலுக்கலாம் . அதே போல ஹீரோயின் ஓரியண்டட் சப்ஜெக்டாக கொடுத்தமைக்கும் சபாஷ் . பேஷ் புக் , ட்விட்டர் காலத்தில் பார்க்காமலேயே போனில் காதல் செய்யும் காட்சிகளை முடிந்தவரை நம்பும்படியாகவே எடுத்திருக்கிறார் கேபிள் . காதல் ப்ளாட் பழசாக இருந்தாலும் காட்சிகளை ப்ரெஸ்ஸாக வைத்தமைக்கு பாராட்டுக்கள் ...
பாலாஜியின் ஓவர் டோஸ் வசனங்கள் , ஹீரோயினின் சித்தி எபிசோட் , தம்பி ஆக்ஸிடெண்டுக்கு பணம் தேவைப்படுவது என்று நிறைய பழைய நெடி அடித்தாலும் இன்டர்வெல் ப்ளாக்கில் சரியாக ட்விஸ்ட் வைக்கும் கேபிள் அதன் பிறகு அதை தக்க வைக்காமல் தடுமாறியிருக்கிறார் . அதிலும் வில்லனை கண்டுபிடிக்க போகும் இடத்தில் கட்டிங்கை பார்த்தவுடன் கை நடுங்கும் குடிமகனைப் போல ரூமை போட்டவுடன் ஜல்சா வுக்கு ரெடியாகும் ஹீரோயின் எல்லாம் " என்னம்மா இப்படீ பண்ணுறீங்கலேம்மா " ...
கொலையை விபத்து போல செய்யும் வின்சென்ட் ஹீரோயினை நேரடியாக துரத்துவது சொதப்பல் . அதிலும் க்ளைமேக்ஸில் காரை துரத்திக் கொண்டு அவர் பைக்கில் போவதெல்லாம் ஹை வே காமெடி . படத்தை முடித்திருப்பதிலும் அவசர கதி தெரிகிறது . இந்த படத்திற்கு ப்ளஸ் மைனஸ் இரண்டுமே கேபிள் தான் . அதிகம் பரிச்சியமில்லாதவர்கள் நடித்திருக்கும் படத்திற்கு பிரபல ப்ளாகரான கேபிளும் , அவருடைய கதையும் ப்ளஸ் . அதே சமயம் அவருக்காக எதிர்பார்ப்புடன் வருபவர்களை ஏமாற்றும் வகையில் ஆவெரேஜாக படம் இருப்பது மைனஸ் . எந்த படமாக இருந்தாலும் அதன் நிறை குறையை நேர்த்தியாக அலசி ஆராய்ந்து அழுத்தமான எழுத்துக்களால் கவரும் கேபிள் சங்கர் தனது முதல் படமான தொட்டால் தொடரும் மூலம் நம்மை மைல்டாகவே டச் செய்கிறார் . இருப்பினும் முதல் படத்தையே குடும்பத்துடன் பார்க்கும் படியான டீசண்ட் டச்சுடன் கொடுத்ததால் அவருடைய பணி தொடர வாழ்த்துக்கள் ...
ஸ்கோர் கார்ட் : 40