3 September 2017

குரங்கு பொம்மை - KURANGU BOMMAI - க்யூட் ...


வசரப்படாமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கும் விதார்த் புதுமுக இயக்குனர் நித்திலன்  இயக்கத்தில் நடித்திருக்கும் படம் குரங்கு பொம்மை . பாண்டிய நாடு க்கு பிறகு ஒரு அருமையான கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடித்திருப்பது கூடுதல் சிறப்பு ...

தஞ்சாவூரின் பெரும்புள்ளி ஏகாம்பரம் ( பி.எல்.தேனப்பன் ) தன் பால்ய நண்பன் சுந்தரத்தை  ( பாரதிராஜா ) வைத்து  குரங்கு ஸ்டிக்கர் போட்ட பையில் சிலையை கடத்துகிறார் . அது அவர் சென்னையில் கார் ஓட்டுனராக இருக்கும் கதிர் ( விதார்த் ) கைக்கு போகிறது . இந்த குரங்கு பை ( படத்துக்கு இந்த பேர் தான் பொருத்தமாக இருந்திருக்கும் ) யை அலைய விட்டு அதோடு நம்மையும் சேர்த்து அருமையான திரைக்கதையில் கோர்த்திருக்கிறார் இயக்குனர் ...

விதார்த் துக்கு அலட்டிக்கொள்ளாத அமைதியான நடிப்பு . லவ் சீன்களில் சுமாராக தெரிந்தாலும் அப்பாவின் நிலைமை தெரிந்து அழும் இடத்தில் அருமையாக நடித்திருக்கிறார் . பாரதிராஜா வுக்குள் இருக்கும் நடிகனுக்கு குரங்கு பொம்மை கொரில்லா தீனி . குமரவேலிடம் தன் கடந்த காலத்தை ஒரே ஷாட்டில் சொல்லும் போது சேன்ஸே இல்ல . இவர் மார்க்கெட் போன மற்ற இயக்குநர்களோட சேர்ந்து வெட்டியா தமிழன் தமிழன் னு கத்திக்குட்டு இருக்காம   இந்த  மாதிரி படங்கள்ல நடிக்கலாம் ...

படத்தில் முக்கியமான மற்ற இருவர் தேனப்பன் மற்றும் குமரவேல் . முதல் சீனிலேயே மிரட்டும் தேனப்பன்  உற்றுப் பார்த்தபடியே குமரவேலிடம் சிலையை பற்றி விசாரிக்கும் இடம் அருமை . ஃபீல் குட் படங்களிலேயே நடித்துக் கொண்டிருந்த குமரவேலுக்கு நெகட்டிவ் ஷேடில் இந்த படம் நல்ல திருப்பம் . கொஞ்சமே கொஞ்சமாய் செயற்கைத்தனம் தெரிந்தாலும் ஓவர் ஆல் அந்த கேரக்டருக்கு பலம் சேர்க்கிறார் குமரவேல் . கிருஷ்ணமூர்த்தி , கல்கி என்று சின்ன ரோல்களில் நடித்தவர்களும் கவனிக்க வைக்கிறார்கள் . ஹீரோயின் பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்கணும்னு பேச்சுக்கு சொல்லுவாங்க இதுல பக்கத்து வீட்டுப் பொண்ணே  நடிச்சுருச்சோ என்னவோ ?!!


நான் லீனியரில் சொல்லப்படும் கதையை சரியான கலவையில் இணைத்திருப்பதே இயக்குனரின் வெற்றி . திரில்லர் படத்தில் திருடன் , இன்ஸ்பெக்டர் , கந்து வட்டி விடும் ரவுடி இப்படி சின்ன கேரக்டர்களை வைத்து ப்ளாக் காமெடி செய்திருப்பது பலம் . சீரியஸான சீனில் என்ன பை என்று கேட்கும் குமரவேலிடம் ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை என்று தேனப்பன் கலாய்ப்பது க்ளாஸ் ... 

சாதாரணமாக ரோட்டில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் சேகர் பணத்துக்காக அசாதாரணமாக செய்யும் வேலைகள் உறைய வைக்கின்றன . கிருஷ்ணமூர்த்தி , பிக்பாக்கெட் திருடன் ஒவ்வொருவருக்குமான  பணத்தேவையை  சொல்லியிருப்பது , ஏகாம்பரம் நான்  பணத்துக்காக வரல என் நண்பனுக்காக வந்தேன் என்று சொல்வது இப்படி கிடைக்கும் இடங்களில் சிக்ஸர் அடிக்கிறார் நித்திலன் ...

லாரியில் பின் கட்டப்பட்ட குழந்தை எங்கு போனது , அந்த போலீஸ் ஸ்டேஷன் சீனில் திடீரென விபத்து வருவது , அவ்வளவு பெரிய ஆள் ஏகாம்பரத்தை இவ்வளவு ஈசியாக ஏமாற்றி விட சேகர் திட்டம் போடுவது , மிடில் கிளாஸ் ஏரியாவில் நடக்கும் துப்பாக்கி சூடு கவனிக்கப் படாமல் போவது , பணம் கைக்கு வந்தவுடன் பங்களா , கார் என்று சினிமாட்டிக்காக சேகர் ஆளே மாறுவது இதெல்லாம் பக்கா பிளான் செய்த படத்திலும்  ஆங்காங்கே தெரியும் ஓட்டைகள் . மற்றபடி எந்த ஆடம்பரமுமில்லாமல் சிம்பிளாக வந்திருக்கும் இந்த ஒண்ணேமுக்கா மணி நேர குரங்கு  பொம்மை க்யூட் ...

ரேட்டிங்க்  : 3.5 * /' 5 * 

ஸ்கோர்  கார்ட் : 44 


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...